டெல்லி: ஜனவரி 26ந்தேதி தலைநகர் டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் சிலவற்றுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்காத நிலையில், தமிழகஅரசின் சில ஊர்திகளுக்கும் மத்தியஅரசு அனுமதி மறுத்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஜனவரி 26ந்தேதி  குடியரசு தினத்தன்று டெல்லி செங்கோட்டையில் ஆண்டுதோறும்  மாநிலங்களின் சிறப்பம்சங்களைப் பறைசாற்றும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு இடம்பெறும். அதன்படி இந்த ஆண்டும், தமிழ்நாடு உள்பட பல மாநிலங்கள் சார்பில் அலங்கார ஊர்திகள் செல்ல அனுமதி கோரப்பட்டடது. ஆனால்,  மகாராஷ்டிரா, பஞ்சாப், சத்தீஸ்கர் உள்ளிட்ட 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகளை மட்டுமே மத்திய அரசின் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்துள்ளது. இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் இருந்த கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி., வீரமங்கை வேலுநாச்சியார், பாரதியார் உருவங்கள் அடங்கிய ஊர்திகள் இடம்பெறுவதாக இருந்தது. ஆனால், அதற்கு மத்தியஅரசு அனுமதி மறுத்துள்ளது. மிகவும் பிரபலமான சுதந்திரப்போராட்ட வீரர்களை மட்டுமே எதிர்பார்ப்பதாக மத்தியஅரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுதந்திரபோராட்ட தியாகிகளை மத்தியஅரசு தெரியாது என தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தை தவிர, மற்ற தென்மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகளை மத்தியஅரசு நிராகரித்துள்ளது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க அலங்கார ஊர்தி தேர்வு செய்யப்படாததற்கு அதிருப்தி தெரிவித்துள்ள அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி, அதுபற்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், நாட்டுக்கு சேவையாற்றிய நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், நோபல் பரிசு வென்ற ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் சிறப்பம்சங்களுடன் தாங்கள் அலங்கார ஊர்தியை வடிவமைத்திருந்ததாக சுட்டிக் காட்டியுள்ளார்.

கேரளாவின் அலங்கார ஊர்தி தேர்வாகாததற்கு அம்மாநில அரசியல் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தங்கள் மாநில அலங்கார ஊர்தியில் சங்கராச்சாரி யாரின் வாழ்க்கை வரலாறு இடம்பெற வேண்டுமென மத்திய அரசு எதிர்பார்த்ததாகவும், ஆனால் சமூக சீர்திருத்தவாதி நாராயண குரு குறித்த முக்கிய அம்சங்கள் இடம்பெற்றதால் நிராகரித்துள்ளதாகவும் கேரள கல்வி அமைச்சர் சிவன்குட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.