சென்னை: கவர்னர் ஆர்.என். ரவி, தமிழ்நாட்டை தமிழகம் என அழைக்க வேண்டும் என நிகழ்ச்சி ஒன்றில் பேசியது சர்ச்சையானது. இதையடுத்து, கவர்னர் மாளிகை விளக்கம் வெளியிட்டு உள்ளது.

 காசி தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை கௌரவிக்கின்ற வகையில் சென்னை கிண்டியில்  ஆளுநர் மாளிகையில் நிகழ்ச்சி நடந்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று தன்னார்வலர்களை பாராட்டி இருக்கிறார் ஆளுநர் ஆர்.என். ரவி.   அப்போது பேசியவர்,  தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் இருக்கிறது.  எல்லா வற்றுக்கும் நாங்கள்  திராவிடர்கள் என்று சொல்கிறார்கள்.  இந்தியா முழுவதும் ஒரு செயல் திட்டம் இருந்தால் அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு.   முதலில் தமிழ்நாடு என்று சொல்வதை விட தமிழகம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும் .   ஆங்கிலேயர் காலத்தில் தான் மாநிலங்கள் உருவாக்கப்பட்டன .  பாரதத்தின்  பகுதி  தமிழகம்.    பாரதத்தின் அடையாளம் தமிழகம் .  உலக நாடுகளுக்கு அடுத்த 25 ஆண்டுகளுக்கு இந்தியா தான் தலைமையாக இருக்கப் போகிறது என்று பேசியிருக்கிறார்.

தமிழ்நாடு என்கிற சொல்லை தவிர்த்து தமிழகம் என்கிற சொல்லை பயன்படுத்த வேண்டும் என ஆளுநர் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஆளுநரின் இந்த பேச்சுக்கு திமுக கடும் கண்டனம்  தெரிவித்து வருகிறது.  டிவிட்டர் சமூக வலைதளத்திலும்  #தமிழ்நாடு என்கிற ஹேஷ்டேக்  டிரெண்ட் ஆகி வருகிறது.

இந்த நிலையில்,  கவர்னரின் பேச்சு தொடர்பாக கவர்னர் மாளிகை விளக்கம் வெளியிட்டுள்ளது. அதில் , பிரதமர் மோடி நமது நாட்டை “பாரதம்” என்ற கண்ணோட்டத்தில், “ஒரே குடும்பமாக” பார்க்கிறார். ஆனால் இந்த யதார்த்தம் காலனித்துவ காலத்தில் இருந்து உருவாக்கப்பட்ட புகைமூட்டத்தால் மறைக்கப்பட்டுள்ளது. அதற்கேற்பவே தமிழகத்தில் “நாங்கள் திராவிடர்கள்” என்ற பிற்போக்கு அரசியல் இருந்து வருகிறது. அதனுடன் நமக்கு எந்தத் தொடர்பும் இல்லை. நாம் அரசியலமைப்பால் ஒன்றிணைக்கப்பட்டு அதன் அடிப்படையில் மட்டுமே செயலாற்றுகிறோம்.

ஆனால் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ்நாட்டில் ‘நாங்கள் ஒருங்கிணைந்த தேசத்தின் அங்கம் இல்லை’ என்று வலுவான ஒரு கதையை சொல்லி வருகிறார்கள். அதனாலேயே நாடு முழுவதற்கும் பொருந்தக்கூடிய அனைத்தையும், தமிழ்நாட்டில் உள்ளவர்கள் ‘இல்லை, எங்களுக்கு வேண்டாம்’ என்று சொல்லும் நிலை உருவாக்கப் பட்டுள்ளது. இதற்கு மாறாக நாம் அனைவரும் ஒன்று. பாரதத்தின் ஒரு பகுதி தமிழ்நாடு. அதற்கேற்ப தமிழகம் என்று நாம் அழைப்பதே மிகவும் பொருத்தமானது.

காரணம், இந்த நிலம் பாரதத்தின் ஆன்மாவை, பாரதத்தின் அடையாளத்தை பராமரிக்கிறது. வெளிநாட்டினர் ஏற்படுத்திய பல அழிவுகளையும் மீறி பல ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் ஒற்றுமை பராமரிக்கப்பட்டு வருகிறது. முழு பாரதத்தையும் நிலைநிறுத்தி அதற்குப் புத்துயிர் தருவது இந்த நம்பிக்கை தான்; இப்போது இதை சிலர் பொய்யாக்க முயற்சிப்பதை ஏற்க முடியாது.

இவ்வாறு கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது.