சென்னை: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீரர் செல்வ பிரபுவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

20 வயதுக்குட்பட்டோருக்கான உலக தடகள சாமிபியன்ஷிப் போட்டி கொலம்பியாவில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த செல்வ பிரபு தாண்டுதலில் வெள்ளிப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் உலக தடகள சாம்பியன்ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

தமிழக வீரர் செல்வ பிரபுவிற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில்,  உலக தடகள சாம்பியன் ஷிப்பில் மும்முறை தாண்டுதலில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைச் சாதித்திருக்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த செல்வ பிரபு அவர்களுக்கு எனது பாராட்டுகள். வருங்காலத்தில் தடகளப் போட்டிகளில் இந்தியாவின் அடையாளமாக நீங்கள் மின்ன வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டிருந்தார்.