சென்னை: பெண்களுக்கான இலவசமாக பயணம் செய்யும் பிங்க் கலர்  பேருந்து சேவையை சேப்பாக்கம் எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு  பெண்களுக்கு இலவச பேருந்து சேவை வழங்கி வருகிறது. இதுவரை,  சாதாரண நகர பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யும் திட்டம் அமலில் இருந்தது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், பேருந்துகளை அடையாளம் காண்பதில் சிரமம் இருந்து வந்தது. சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் 1,559 பேருந்துகளில் பெண்கள் கட்டணமின்றி பயணம் செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது 10.50 லட்சம் பேர் இலவசமாக பயணித்து வருகின்றனர். சென்னையில் ஓடக்கூடிய மொத்த மாநகர பஸ்களில் 50 சதவீத பஸ்களில் பெண்கள் பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் பெண்களை ஏற்றி இறக்க வேண்டும் என டிரைவர்-கண்டக்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் முதல் கட்டமாக 50 பஸ்கள் ‘பிங்க்” நிறத்திற்கு மாற்றப்பட்டு இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்பட்டது. பிங்க் நிற பஸ் சேவையை சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. இன்று தொடங்கி வைத்தார். அத்துடன், மெட்ரோ ரெயில் நிலையங்களை இணைக்கும் வகையில் 10 மினி பஸ் சேவையையும் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சிவசங்கர், பி.கே.சேகர்பாபு, மண்டல தலைவர் மதன்மோகன், மாநகர போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.