சென்னை:

2019ம் ஆண்டின்  தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டம்  ஜனவரி மாதம் 2ந்தேதி தொடங்கி ஒரு வார காலம் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து தற்போது பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 8ந்தேதி தொடங்கும் என்று சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்து உள்ளார்.

புத்தாண்டின் முதல் தமிழக சட்டமன்ற கூட்டத் தொடர் ஜனவரி மாதம் 2ந்தேதி  காலை 10 மணிக்கு தொடங்கியது. அன்றைய தினம் உரையாற்றிய ஆளுநர் பன்வாரிலால் எளிமையான வாழ்க்கை வாழுங்கள் என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அறிவுரை கூறினார்.

சுமார் ஒருவார காலம் மட்டுமே நடைபெற்ற அந்த கூட்டத்தொடர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து முதல்வர் பேசியதும், சபை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வரும் 8ந்தேதி தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அன்று காலை 10 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் 2019-2020ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்கிறார்.