சென்னையில் இரண்டு நாட்களுக்கு முன் (6-5-2024) 5 வயது சிறுமியை ராட்வீலர் இன வகையைச் சேர்ந்த வளர்ப்பு நாய்கள் இரண்டு கடித்து குதறின. இதில் சிறுமி உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழக மக்களை அச்சத்தில் ஆழ்த்தியதை அடுத்து 23 வகையான நாய்களை வளர்க்க தடை விதித்து தமிழ்நாடு கால்நடை வளர்ப்பு துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை கடந்த மார்ச் மாதம் 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்கள் மிகவும் ஆக்ரோஷமானவை எனவும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் எனவும் பட்டியலிட்டுள்ளது.

பிட்புல் டெரியர், தோசா இனு, அமெரிக்கன் ஸ்டப்போர்டு ஷயர் டெரியர், பிலா ப்ரேசிலேரியா, டோகா அர்ஜென்டினா, அமெரிக்கன் புல் டாக், போயர் போயல், கன்கல், சென்ட்ரல் ஆசியன் ஷெபர்டு டாக், காக்கேஷியன் ஷெபர்டு டாக், சௌத் ரஷ்யன் ஷெபர்டு டாக், டோன் ஜாக், சர்ப்ளேனினேக், ஜாப்னிஸ் தோசா, அகிதா மேஸ்டிப், ராட்வீலர்ஸ், டெரியர், ரொடீசியன் ரிட்ஜ்பேக், உல்ப் டாக், கேனரியோ அக்பாஸ் டாக், மாஸ்கோ கார்ட் டாக், கேன்கார்சோ மற்றும் பேண்டாக் ஆகிய இந்த இன நாய்களை வளர்க்க தடை விதிக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது.

இதனை அடுத்து இந்த 23 வகையான நாய் இனங்கள் மற்றும் அவைகளின் கலப்பினங்களை இறக்குமதி செய்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும், வளர்ப்பு பிராணிகளாக விற்பனை செய்வதற்கும் மற்றும் இவைகளின் எல்லா வகை பயன்பாட்டையும் தடை செய்யப்பட்டுள்ளது.

தற்போது வளர்ப்பு பிராணியாக மேற்கண்ட இவ்வகை நாய்களை வைத்திருப்போர் அவற்றை உடனடியாக ஆண் / பெண் கருத்தடை அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்கம் செய்யாதவாறு பார்த்து கொள்ள வேண்டும்.

நாய் வளர்ப்பவர் நாயை வெளியில் பொது இடங்களுக்கு கூட்டி செல்லும் போது கட்டாயமாக லீஷ் (இணைப்பு சங்கிலி) மற்றும் தற்காப்பு முக்கவசம் அணிந்து அழைத்து செல்ல வேண்டும். அந்த இணைப்பு சங்கிலியின் அளவு நாயின் மூக்கு நுனியிலிருந்து வால் அடிப்பகுதி முடியும் வரை அதன் உடல் அகலத்திற்கு ஏற்பவாறு (குறைந்தபட்சம் 3 மடங்கு நீளம்) இருக்க வேண்டும்.

நல்ல தரமான கழுத்துப்பட்டை / தோள்பட்டை அணிவித்து நாய் உரிமையாளர்கள் தங்கள் செல்லப் பிராணிகளை வெளியே அழைத்துச் செல்வது, செல்லப் பிராணிகளுக்கும், பொதுமக்களுக்கும் பாதுகாப்பாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.