சென்னை: தமிழக விமான நிலையங்கள், ஊட்டி மலை ரயில் உள்பட ரயில் நிலையங்கள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளை தனியாரிடம் குத்ததைக்கு விடும் நடவடிக்கையில் மத்தியஅரசு முனைப்பு காட்டி வருகிறது. ஏற்கனவே சென்னை அருகே உள்ள துறைமுகம் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்ட நிலையில், தற்போது,  சென்னை, திருச்சி, மதுரை விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க தயாராகி வருகிறது.

தேசிய பணமாக்குதல் என்ற திட்டத்தின்படி, மோடி தலைமையிலான  பாஜக அரசு நிதி ஆயோக் உதவியுடன், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்த்து வருகிறது.  அதன்படி, நாடு முழுவதும் உள்ள முக்கிய விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், நிலக்கரி சுரங்கங்கள், தேசிய நெடுஞ்சாலைகளை தனியாருக்கு குத்தகைக்கு விட மத்திய அரசு முடிவு செய்து, அதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

ஏற்கனவே  2022 முதல் 2025 வரையிலான இந்த காலக்கட்டத்தில்,  தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் உள்ள 15 ரயில்நிலையங்கள், 25 விமான நிலையங்கள், 160 சுரங்கங்கள் தனியார் நிறுவனங்களுக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளன.

இத்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில்  திருச்சி விமான நிலையம் முதலில் தனியாருக்கு குத்தகைக்கு விடப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து மதுரை, கோவை விமான நிலையங்களும் அடுத்தபடியாக சென்னை விமான நிலையமும் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளது.

பாரம்பரியம் மிக்கதும், சுற்றுலா தளமான ஊட்டியில் இயங்கும் மலை ரயில் மற்றும்  சென்னை ரயில் நிலையங்களும் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

இதுமட்டுமின்றி,  தமிழ்நாட்டில் 491 கிலோ மீட்டர் நீளம் கொண்ட தேசிய நெடுஞ்சாலைகளையும் தனியாரிடம் ஒப்படைக்கிறது. அதன்படி,  உளுந்தூர்பேட்டை – பாடாலூர், உளுந்தூர்பேட்டை – திண்டிவனம், திருச்சி – பாடாலூர், கிருஷ்ணகிரி – தோப்பூர்காட், ஓசூர் – கிருஷ்ணகிரி, தாம்பரம் – திண்டிவனம், திருச்சி – காரைக்குடி ஆகிய நெடுஞ்சாலைகள் தனியார் குத்தகைக்கு செல்கின்றன.

இந்தியாவிலேயே அதிக வருவாய் பெற்றுத்தரும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தையும்  தனியாரிடம் ஒப்படைக்க மோடி அரசு   செய்து உள்ளது.

இதுகுறித்து பேசியுள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “தேசிய பணமாக்கும் திட்டம் என்பது அரசு நிறுவனங்கள் மீது தனியார் முதலீட்டை ஈர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்டது. இந்த நிறுவனங்களை தனியாரிடம் குத்தகைக்கு விடுவதன் மூலம் ரூ.6 லட்சம்கோடி  வருவாய் திரட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த பணம், புதிய திட்டங்களை தொடங்குவதற்கும், உள் கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கும் பயன்படுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

போறப்போக்கைப் பார்த்தா.. வரும் தலைமுறையினருக்கு அரசு வேலை என்பது காணல்நீராக மாறிவிடுமோ என்ற அச்சம் எழுகிறது…