புதுகை:

ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக போராடி வரும் நெடுவாசல் மக்கள் நேற்று மரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர்.  இன்றும் போராட்டம் தொடர்கிறது. ஆனால் பெரும்பாலான ஊடகங்கள் இந்த போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை என்று மக்கள் ஆதங்கப்படுகிறார்கள்.

இந்தியா முழுவதும் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தின் அடிப்படையில் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.   இதை எதிர்த்து நெடுவாசல் கிராம மக்களும் பல்வேறு அமைப்புகளும்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.  மத்திய அமைச்சர்கள் அளித்த உத்திரவாதத்தின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.  ஆனால், மீண்டும் இத் திட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், மீண்டும் நெடுவாசலில் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. தூக்குப்போடுதல், முட்டிப்போட்டுதல்,  அங்கப் பிரதட்சணம் செய்தல் என்று பல்வேறு விதங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்று இருபதாம் நாள் போராட்டமாக மரத்தில் ஏறி போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் இன்று இருபத்தோராவது நாளாக போராட்டம் நடந்துகொண்டிருக்கிறது.  நூற்றுக்கும் மேற்ப்பட்ட  மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டமானது நெடுவாசல் நாடி அம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என மக்கள் முழக்கம் எழுப்பி வருகிறார்கள். அதோடு, பெரும்பாலான ஊடகங்கள் தங்களது போராட்டத்தை கண்டுகொள்ளவில்லை என்று ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினர்.