மதுரை: தொல்லியல்துறை படிப்பில் தமிழ் புறக்கணிக்கப்பட்டுள்ளதற்கு தமிழக்ததில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், தற்போது, தமிழ் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையில், இதுதொடர்பாக  உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கு  இன்று விசாரணைக்கு வருகிறது.

இதுதொடர்பாக மத்திய தொல்லியல்துறை இணை இயக்குனர்  வெளியிட்டுள்ள உத்தரவில்,  தமிழ், கன்னடம், மலையாளம், ஒடிஷா உள்ளிட்ட 10 மொழிகளுக்கு அனுமதி வழங்கி புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மத்திய தொல்லியல்துறை பட்டய படிப்புக்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.   மத்திய அரசின் தொல்லியல் துறையின் சார்பில், பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொல்லியல் நிறுவனம் உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் இயங்கி வருகின்றது. இந்நிறுவனம், தொல்லியல் துறை சார்ந்த 2 ஆண்டு முதுகலைப்  பட்டயப் படிப்புக்கான குறிப்பு ஆணையை வெளியிட்டு, முதுகலைப் பட்டம் பெற்று இருப்போர் விண்ணப்பிக்கலாம் என்று செய்தித்தாள்களில் விளம்பரம் செய்துள்ளது. அதில், வரலாறு. தொல்லியல்துறை, மானிடவியல் மற்றும் செம்மொழிகளான சம்ஸ்கிருதம், பாலி, பிராகிருதம் மற்றும் அரபு மொழிகளில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

மத்திய அரசின் தொல்லியல் துறையின் முதுகலைப் பட்டப் படிப்புக்கான கல்வித் தகுதியில்  செம்மொழியான தமிழ் மொழி புறக்கணிப்புக்கு  அரசியல் கட்சியினர், தமிழ்ஆர்வலர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக உயர்நீதி மன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தொல்லியல்துறை படிப்பில் தமிழ் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட உள்ளது. : தமிழகத்தின் கடும் எதிர்ப்பால் மத்தியஅரசு பணிந்தது  இந்த அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.