சென்னை: கொரோனா தொற்று பரவல் காரணமாக,  தமிழகம் முழுவதும்  நடைபெற இருந்த சத்துணவு அமைப்பாளர், சமையலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் சத்துணவு அமைப்பாளர்கள், சமையலர்கள் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு, பணிக்கான தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடைபெற இருந்தது. ஆனால், தற்போது,  கொரோனா பரவல் காரணமாக தற்காலிகமாக தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைப்பதாக அறிவிக்கப்பட்ட உள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாடு முழுவதும் சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறையில் ஏற்பட்டுள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களால் அறிவிக்கை வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வுப் பணிகள் நடைபெற உள்ளன.
இப்பணிகளுக்கு மிக அதிக அளவில் மனு பெறப்படுவதால், நேர்காணல் தேர்வு பணிகளில் மனுதாரர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொள்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்று பரவல் முற்றிலும் நீங்காத நிலையில், நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன், சத்துணவு அமைப்பாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைமுறைகள் அரசால் நிறுத்தி வைக்கப்படுகிறது.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.