சென்னை: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல் முடிவு வரும் 23ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் அதிகாரியும், ஓய்வு பெற்ற நீதிபதியுமான ஜெயச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020-2022ம் ஆண்டுகளுக்கான நிர்வாக குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 22ம் தேதி, சென்னை அடையாறு எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (சத்யா ஸ்டுடியோஸ்) வளாகத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவு முடிந்தவுடன் தொடர்ந்து நிர்வாகிகளுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று , முடிவுகள் 22.11.2020 அன்றே அறிவிக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. மேலும் தற்போதைய கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகள் கடைப்பிடிக்கும் விதமாகவும், பொது பாதுகாப்பு சம்பந்தமான காவல்துறையின் அறிவுறுத்தலின்படியும் செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்கு எண்ணிக்கை 23.11.2020 அன்று காலை 10 மணிக்கு தொடங்கி அன்று மாலை முடிவுகள் அறிவிக்கப்படும்.

செயற்குழு உறுப்பினர்களுக்கான வாக்குபெட்டிகள் அனைத்தும் வாக்குப்பதிவு முடிந்தவுடன், தேர்தல் நடக்கும் கல்லூரியில் காவல்துறை பாதுகாப்புடன் சீல் வைக்கப்படும் என்றும் தெரிவித்து கொள்ளப்படுகிறது.

வேட்பாளர்கள் அல்லது அவரது பிரதிநிதிகள் கல்லூரி வளாகத்திற்கு வரும் போது அரசு அறிவித்துள்ள வழிமுறைகளை பின்பற்றி முக கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியினை பின்பற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.