சென்னை: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுங்கள் என  பாரத பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டியதாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது. அதுபோல, இதுகுறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதுவதும் வாடிக்கையாகவே உள்ளது. ஆனால், இதில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை.

இலங்கை அரசைல் கைது செய்யப்பட்டுள்ள தமிழ்நாட்டு மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடிப் படகுகளை விடுவித்திடவும், மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண கூட்டு நடவடிக்கைக் குழுவினைப் புதுப்பித்திடவும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டு,  இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதி உள்ளார்.

இதுகுறித்து  அவர் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை கடற்படையினர் கடந்த 2023-ல் 243 தமிழக மீனவர்களை கைது செய்து, 37 படகுகளை பறிமுதல் செய்துள்ளனர். கடந்த 28 நாட்களில் மட்டும் 88 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, 12 மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டு மீன்பிடி படகுகளை நாட்டுடமையாக்க இலங்கை அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், 2018-ல் இலங்கை அரசால் கடல்சார் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தம் தொடர்பாக, முன்பே நான் எழுதிய கடிதத்தில் சுட்டிக்காட்டி இருந்தேன். எனவே, பறிமுதல் செய்யப்பட்டு நாட்டுடமையாக்கப் பட்டுள்ள இந்திய மீன்பிடி படகுகளை திரும்ப பெறவும், படகுகளை உடனடியாக விடுவிக்கவும் ஏதுவாக, சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ள இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

இலங்கை வசம் உள்ள 77 மீனவர்கள் மற்றும் அவர்களது 151 படகுகளை உடனடியாக விடுவிக்க தேவையான அனைத்து தூதரக முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

கடந்த ஜன.3-ம் தேதி பாகிஸ்தான் அதிகாரிகளால் சிறை பிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களையும், 2023 டிச.5-ம் தேதி குவைத் கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்ட 4 தமிழக மீனவர்களையும் விடுவிக்க, உரிய தூதரக வழிமுறைகளை பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் வலியுறுத்தி உள்ளார்.