அகமதாபாத்: சையது முஷ்டாக் அலி டி-20 தொடர் சாம்பியன் பட்டத்தை இரண்டாவது முறையாக வென்றது தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழ்நாடு அணி.

அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், பரோடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது தமிழ்நாடு அணி.

டாஸ் வென்ற தமிழ்நாடு அணி, முதலில் பீல்டிங் தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய பரோடா அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 120 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தமிழ்நாடு அணியின் சார்பில், சித்தார்த் 4 விக்கெட்டுகளை சாய்த்து முக்கியப் பங்காற்றினார்.

பின்னர் எளிய இலக்கை விரட்டிய தமிழ்நாடு அணியில், ஹரி நிஷாந்த் 35 ரன்களை அடிக்க, கேப்டன் தினேஷ் கார்த்திக் 22 ரன்களைச் சேர்த்தார். பாபா அபாரஜித் 29 ரன்களை சேர்த்தார். இறுதியில் 18 ஓவர்களிலேயே இலக்க‍ை எட்டி, 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது தமிழ்நாடு அணி.

கடந்த 2006-2007ம் ஆண்டில், சையது முஷ்டாக் அலி தொடரில் முதன்முறையாக கோப்பை வென்றது தமிழ்நாடு. அதன்பிறகு, தற்போது 2வது முறையாக கோப்பை வென்றுள்ளது தமிழ்நாடு அணி.