பிரியாணி கடையால் ஸ்வீட் கடைக்கு நேர்ந்த பரிதாபம்….

தனது ஸ்வீட் கடையில் வியாபாரம் ஏதுமில்லாமல் ஈ ஓட்டிக்கொண்டிருந்த அதன் ஓனர் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார், தனது கடைக்குள் ஒரு கார் புகுந்து அவரை படுகாயப்படுத்தும் என்று.

பூந்தமல்லி சாலையில் நாசரத்பேட்டை அருகே ஸ்வீட் கடை வைத்திருப்பவர் 47 வயது பெரியசாமி.  திங்களன்று வியாபாரம் ஏதுவுமின்றி கடை உள்ளே அமர்ந்திருந்தார் இவர்.  அதே ஏரியாவில் கூல் டிரிங்க்ஸ் கடையில் வேலை செய்யும் 16 வயது சிறுவன் ஒருவன் அப்பகுதியில் கார் ஓட்டிப்பழகிக் கொண்டிருந்தான்.  மதியம் 3 மணி வாக்கில், இச்சிறுவன் தான் ஓட்டி பழகிக்கொண்டிருந்த காரை கட்டுப்பாடு இழந்து அந்த ஸ்வீட் கடையின் மேல் மோதி விட்டான்.  இதனால் கடையில் உட்கார்ந்திருந்த பெரியசாமிக்குப் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அருகேயிருந்த மற்றக் கடைக்காரர்கள் உடனே ஓடிவந்து பெரியசாமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர்.  பூந்தமல்லி போக்குவரத்துக் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து நடத்திய விசாரணையில் அந்தக் கார் அப்பகுதியில் பிரியாணிக்கடை நடத்தும் ஒருவருடையது என்று தெரிய வந்துள்ளது.  இப்போது இவரையும், அச்சிறுவனையும் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

– லெட்சுமி பிரியா