ஸ்டாக்ஹோம்

பேச்சு சுதந்திரம் என்னும் பெயரில் சுவீடனில் குரான் எதிர்ப்பு போராட்டத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சுவீடனில் இஸ்லாம் மற்றும் குர்தீஷ் இன மக்களின் உரிமைகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அங்கு ஹார்டு லைன் என்ற அரசியல் கட்சியைச் சேர்ந்த தலைவரான ரஸ்மஸ் பலூடன் என்பவர் ஸ்டாக்ஹோம் நகரில் துருக்கி தூதரகம் அருகே கடந்த ஜனவரியில், குரான் நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் குவைத் உள்ளிட்ட பல அரபு நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தன.  கடந்த ஜனவரி இறுதியில், நேட்டோவில் சுவீடன் இணைவதற்காக நடத்தப்பட இருந்த பேச்சுவார்த்தையைத் துருக்கி ரத்து செய்தது.  நேட்டோவில் சுவீடன் இணைவதற்கான ஆதரவை வழங்கக் கூடிய நாடுகளில் ஒன்றாக துருக்கியும் உள்ளது.

சுவீடனில் ஸ்டாக்ஹோம் நகரில் மசூதி ஒன்றின் வெளியே குரான் எரிப்பு போராட்டம் நடத்த வேண்டும் என்ற நபர் ஒருவரின் கோரிக்கைக்கு அந்நாட்டு காவல்துறை அனுமதி மறுத்தனர். பலமுறை இது போல் விண்ணப்பங்கள் வந்தபோதும், அவற்றை காவல்துறை அனுமதிக்கவில்லை.

சுவீடனின் நீதிமன்றங்கள் இந்த முடிவைத் தள்ளுபடி செய்தன. மக்களுக்கான பாதுகாக்கப்பட்ட பேச்சு சுதந்திர உரிமையில் தலையிடுகிறீர்கள் என கூறியுள்ளன.

இதனைத் தொடர்ந்து காவல்துறை,

”இந்த போராட்டம் வெளியுறவுக் கொள்கையில் பின்விளைவுகளை ஏற்படுத்தும்.  குரான் எரிப்பால் ஏற்படும் பாதுகாப்பு ஆபத்துகள் மற்றும் தொடர் விளைவுகள் ஆகியவற்றை முன்னிட்டு விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு இருக்க வேண்டும்

ஆயினும் சிறிய அளவில் போராட்டத்தில் ஈடுபட அனுமதி அளிக்கப்படுகிறது. இதில், 2 பேர் மட்டுமே ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது ”

என்று தெரிவித்து உள்ளது.