விக்னேஷ் சிவன் இயக்கத்தில், சூர்யா நடித்த, “தானா  சேர்ந்த கூட்டம்” திரைப்படம்,  பெரும் எதிர்பார்ப்போடு  பொங்கல் நேரத்தில் வெளியானது.

‘ஸ்டூடியோ கிரீன்’ சார்பாக கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்த இந்த படத்தை,  திருச்சியை சேர்ந்த ‘பரதன் பிலிம்ஸ்’ நிறுவனம் வாங்கி வெளியிட்டது.

“32 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டது. ஆனால் படம் 22 கோடி ரூபாய்தான் வசூலித்துள்ளது. சிறு அளவில் நட்டம் என்றால் கூட விநியோகஸ்தர்கள் தாங்கிக்கொள்வார்கள். ஆனால், கிட்டதட்ட மூன்றில் ஒரு பங்கு நட்டம். ஆகவே படத்தை வாங்கி வெளியிட்ட பரதன் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். நட்டமான 10 கோடி ரூபாய் திருப்பித்தரும்படி, தயாரிப்பாளரஐ  ‘ஸ்டூடியோ கிரீன்’ ஞானவேல்ராஜாவை கேட்டு வலியுறுத்துகிறார்கள்.

இதையடுத்து சில நாட்களுக்குமுன்  திருச்சி சென்று பரதன் பிலிம்ஸ் உரிமையாளர்களை சந்தித்த ஞானவேல்ராஜா, தனது  அடுத்த படத்தில் நட்டத்தை சரி செய்கிறேன் என்று தெரிவித்தார்.

ஆனால் பரதன் பிலிம்ஸ் நிறுவனத்தினர் ஒப்புக்கொள்ளவில்லை. வாக்குவாதம் ஆனது” என்கிறார்கள் கோலிவுட்டில்.

“சரி அதன் பிறகு என்ன ஆச்சு” என்றால்,

“ஞானவேல் ராஜாவின் அடுத்தபடம், ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ “ என்று மட்டும் சொல்கிறார்கள்.