சென்னை:

தேசிய கல்விக்கொள்கை குறித்து பேசிய சூர்யாவின் கருத்து அரசியலாக்கப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், சூர்யாவை ஆதரித்தும், அவரை அரசியலுக்கு இழுக்கும் வகையிலும், அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் போஸ்டர்கள் ஒட்டி அதகளப்படுத்தி வருகின்றனர்.

கல்வித்தந்தை காமராஜர், அப்துல் கலாம் வரிசையில் சூர்யாவை படத்தை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். இந்த போஸ்டர்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை நாடு முழுவதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் சூர்யா, பதிய கல்விக் கொள்கை  அமல்படுத்தப் பட்டால் கிராமப்புற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும் என கூறினார்.

அவரது பேச்சை  பாஜக தலைவர்களும், அதிமுக அமைச்சர்களும்,  கல்வியை பற்றி பேச சூர்யா வுக்கு என்ன தகுதி இருக்கிறதுகடுமையாக விமர்சித்த நிலையில், சூர்யாவின் பேச்சுக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள், சினிமா பிரபலங்கள் ஆதரவு தெரிவித்தது மட்டுமின்றி, பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் சூர்யாவின் பேச்சுக்கு பெரும் வரவேற்பு கிட்டியுள்ளது.

நடிகர் சிவக்குமார் குடும்பத்தினர், ஏற்கனவே அகரம் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி ஆண்டுதோறும் ஏழை மாணவ மாணவிகளின் கல்விக்கு உதவி செய்து வருகிறார்கள். இது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இப்படி இருக்கும்போது, சூர்யாவின் பேச்சு விமர்சிக் கப்பட்டது அவரது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதன் காரணமாக சூர்யாவின் ரசிகர்கள், தமிழக மக்களுக்கு கல்விக்கண் திறந்த காமராஜர் மற்றும் கலாமின்  படத்துடன் சூர்யாவின் படத்தையும் சித்தரித்து போஸ்டர் அடித்து ஒட்டி உள்ளனர்.

இளைய காமராஜரே என்றும்,   ‘அகரத்தின் முதல்வரே’ என்ற வாசகத்துடன் பல இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.  கல்விப் போராளியே என்றும் போஸ்டர்கள் காணப்படு கின்றன.

இதுவரை அரசியல் குறித்து பேசாத சூர்யாவை அரசியலுக்கு இழுக்கும் வகையில் போஸ்டர்களில் வாசகங்கள் பதிவிடப்பட்டு உள்ளன. அதுபோல சமூக வலைதளங்களிலும், சூர்யாவை அரசியலுக்கு வர அவரது ரசிசகர்கள் அழைப்பு விடுத்து வருகின்றனர்.

தற்போதைய போஸ்டர்களை பார்க்கும்போது, நடிகர் விஜய் போல, சூர்யாவும் அரசியலுக்கு வர ஆசைப்படுவதுபோல தெரிகிறது.