டெல்லி: சீமானுக்கு எதிரான பாலியல் வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதில் அளிக்க உத்தரவிட்டுள்ளது.
நடிகை விஜயலட்சியின் புகாரின் பேரில், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக, சென்னை உயர்நிதிமன்றத்தின் உத்தரவின் பேரில், நடிகை கொடுத்த பாலியல் வழக்கு மீதான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் நடத்திய விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் முன்னாள் நடிகை விஜயலட்சுமி ஆகியோர் திருமணம் செய்துகொள்ளாமல், கணவன் மனைவி போல வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விஜயலட்சுமி, சீமான் , தன்னை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 17-ந்தேதி விசாரித்த நீதிபதி, கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதை எதிர்த்து, சீமான் சார்பில் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், ‘இந்த விவகாரத்தில் முன்வைக்கப்பட்ட வாதங்களையும், அனைத்து அம்சங்களையும் உயர்நீதிமன்றம் முறையாக கருத்தில் கொள்ளவில்லை என்றும், தன் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்துசெய்ய வேண்டும். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து தீர்ப்பு கூறும் வரையில், 12 வாரங்களுக்குள் புலன்விசாரணையை போலீசார் நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்’ என கூறப்பட்டு ள்ளது
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கின் விசாரணையின்போது, ஆஜரான சீமான் தரப்பு வழக்கறிஞர், புகார் கூறிய நடிகை, ஏற்கனவே இதுபோன்று, 3 முறை புகார் அளித்து, பின்னர், வழக்கை திரும்ப பெற்றுள்ளார். தமிழ்நாட்டில் திமுக தலைமையிலபான புதிய அரசு பொறுப்பேற்றவுடன் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த பாலியல் புகார் வழக்கு மீண்டும் தொடரப்பட்டுள்ளது என்றும், 12 ஆண்டுகளுக்குப் பிறகு சீமானுக்கு எதிரான அரசியல் சூனிய வேட்டையில் இறங்க காவல்துறை விழித்துக்கொண்டது என்று வழக்கறிஞர் வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், புலன் விசாரணை தொடரட்டுமே என்று கூறியதுடன், இழப்பீடு வழங்க ஏதேனும் வாய்ப்புள்ளதா என கேள்வியெழுப்பினர். இழப்பீடு தொடர்பான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருவதாக சீமான் தரப்பின் தெரிவிக்கப்பட்டது.
இதனை பரிசீலித்த நீதிபதிகள், இந்த வழக்கில் எதிர்மனுதாரர் பதிலளிக்க வேண்டும் என்று கூறியதுடன், வழக்கு தொடர்பான விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். அத்துடன், இரு தரப்பும் பேசி தீர்வு காண 2 மாதங்கள் அவகாசமும் வழங்குவதாக தெரிவித்தனர்.
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவின் மூலம், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சீமான் மீது வளசரவாக்கம் போலீசார் நடத்திய விசாரணைக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.