சென்னை: அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான ஊழல் வழக்கிற்கு தடை விதித்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. இதனால் தன்மீதான ஊழல் வழக்கை செந்தில்பாலாஜி சந்திக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது செந்தில்பாலாஜிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மின்சாரத்துறை அமைச்சராக இருக்கும்  செந்தில்பாலாஜி, முன்பு அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார்.  கடந்த 2011-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில்  டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பணமோசடியில் ஈடுபட்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 வழக்குகளை பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது. ஆனநால், ஆட்சி மாறியதம், காட்சிகளும் மாறின.

இதற்கிடையில், செந்தில்பாலாஜி கட்சி மாறி திமுகவில் சேர்ந்து, முதல்வரின் நன்மதிப்பை பெற்று தேர்தலில் வெற்றிபெற்று மின்சாரத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து, அவர்மீதான பல வழக்குகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், ஊழல் வழக்கும் கிடப்பில் போடப்பட்டது.  இதற்கிடையில், செந்தில் பாலாஜிமீது, சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறையில் விசாரணை நடத்தி வருகிறது.  செந்தில்பாலாஜி மீது, கடந்த 2021-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து  விசாரணைக்கு ஆஜராகும்படி அமைச்சர் செந்தில்பாலாஜி உள்ளிட்டோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது.

ஆனால்,  இந்த சம்மனை எதிர்த்து செந்தில்பாலாஜி மற்றும் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை  ரத்து செய்து உத்தரவிட்டார். இதையடுத்து, அமலாக்கத்துறை சார்பில் உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. இதற்கிடையில் செந்தில்பாலாஜி தரப்பில், உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. மேலும்,  மற்றொரு விவகாரத்தில் பொறியாளா் பிரிவில் பாதிக்கப்பட்ட போலீஸ் தரப்பு சாட்சியாக இருந்த தா்மராஜ் என்பவா் சாா்பில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மெக்கானிக்கல் பொறியாளரான தா்மராஜுக்கு உரிய தகுதியிருந்தும் சென்னை, மெட்ரோ போக்குவரத்து நிறுவனத்தில் வேலைகிடைக்காமல் போனதாகவும், தகுதியற்ற நபா்களுக்கு பணம் பெற்று பணி வழங்கப்பட்டதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டது.  இந்த வழக்குகள் விசாரணைக்கு வந்த போது, மனு மீது வேலை மோசடி பிரிவு காவல் ஆய்வாளா் மற்றும் சண்முகம் உள்ளிட்ட எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம்  தலைமை நீதிபதி அமா்வு உத்தரவிட்டிருந்தது. இதனிடையே, ஊழலுக்கு எதிரான இயக்கம் தரப்பில் தாக்கலான மனுவும் அந்த வழக்குடன் சோ்த்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு  உச்சநீதிமன்ற நீதிபதிகள் எஸ்.அப்துல் நசீர், வி.ராம சுப்ரமணியன்  அமா்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்பில், மின்துறை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான பணமோசடி வழக்கை முடித்து வைத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை அதிரடியாக  ரத்து செய்துள்ளது. மேலும், பணமோசடி வழக்கை தொடர்ந்து விசாரிக்க வேண்டும் என்றும்  உயர்நீதிமன்றத்துக்கு உத்தரவிட்ட  நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்கும்படியும் செந்தில்பாலாஜிக்கு  உத்தரவிட்டுள்ளனர்.

உச்சநீதிமன்ற இந்த தீர்ப்பு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மிகப் பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

வழக்கு விவரம்:

அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி, பலருக்கு டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் பணம் வாங்கி முறைகேட்டில் ஈடுபட்டார். இதை தெரிந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, அவரை பதவியில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்தார். இதுதொடர்பான புகாரின்பேரில் அவர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. புகாரில், டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி,  40 லட்சத்தை பலரிடம் இருந்து பெற்று, அந்த தொகையை செந்தில் பாலாஜி பி.ஏசண்முகத்தில்,  செந்தில் பாலாஜி முன்னிலையில் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தத. ஆனால், பணி நியமனம் தொடர்பான பட்டியலில், பணம் வாங்கியவர்களுக்கு உறுதி அளித்தபடி நியமன உத்தரவு வரவில்லை. இதையடுத்து, பணத்தை  திருப்பித் தருமாறு புகார்தாரர் ராஜ்குமாரை அணுகியபோது செந்தில்பாலாஜி தரப்பில்  இரண்டு காசோலைகள் கொடுக்கப்பட்டதாகவும், ஆனால், வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் அவை திரும்பியதாக கூறப்படுகிறது. மேலும், புகார்தாரரிடம்  15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டதாகவும், மீதி பணத்தை  கொடுக்க  குற்றம் சாட்டப்பட்டவர்  செலுத்துவதைத் தவிர்த்து வந்தார், பின்னர் இந்த விஷயத்தைத் தொடர வேண்டாம் என்று மிரட்டப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த புகாரின் பேரில், விசாரணை நடத்திய காவல்துறையினர், செந்தில்பாலாஜி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டபோது, ​​பாதிக்கப்பட்ட 14 பேரை சாட்சிகளாகக் குறிப்பிடப்பட்டு இருந்தார்.

ஆனால், ஆட்சிகள் மாறியதும், காட்சிகளும் மாறின. காவல்துறை வழக்கை கிடப்பில் போடப்பட்டதுடன், மிரட்டல் காரணமாக, புகார்தாரர்களும் தங்களது புகாரை வாபஸ் பெற்றனர். மேலும், நீதிமன்றமும், இரு தரப்பினரையும் விசாரித்து, இரு தரப்பினரும் தங்களுக்குள் சுமுக தீர்வுக்கு வந்திருப்பதில் திருப்தி அடைந்தது. இந்த நிலையில்தான் அமைக்கத்துறை உள்ளே புகுந்து, செந்தில் பாலாஜியை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது.