டில்லி:

ஃபேல் போர் விமான ஒப்பந்தம்  தொடர்பான மேல்முறையீடு வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

தீர்ப்பில், பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதி மன்றம், ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் கூறி உள்ளது.

ரஃபேல் விமான ஒப்பந்த முறைகேடு  தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வில் கடந்த மாதம்  6ந்தேதி முதல்  விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணையின்போது, ரஃபேல் ஆவனங்கள் திருடு போய் விட்டதாக மத்தியஅரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில், ரஃபேல் தொடர்பான முக்கிய ஆவனங்கள் செய்தித்தாளில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், ரஃபேல் தொடர்பான வழக்கு மேலும் பரபரப்பு அடைந்தது.

இந்த நிலையில், விசாரணையின்போத,  ஆவனங்களை வெளியிட்ட இந்து பத்திரிகை மீதும் அரசாங்க ரகசிய சட்டத்தின்கீழ் விசாரணை நடத்தப்படும் என மிரட்டியது. அதைத்தொடர்ந்து, பாதுகாப்பு அமைச்சக செயலாளர் சஞ்சய் மித்ரா தாக்கல் செய்த மனுவில்,  ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்களை  மனுதாரர்கள் தாக்கல் செய்திருப்பது,  தேசத்தின் பாதுகாப்புக்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது, அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது என தெரிவித்திருந்தார்.

விசாரணையின்போது ஆஜராக அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்,  ரஃபேல்  விவகாரம் தொடர்பாக ஊடகங்களில் கசிந்த ஆவணங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்டு  பெற கூடியவை அல்ல என்று அவர் கூறினார். மனுதாரர்கள், சீராய்வு மனுவுடன் தாக்கல் செய்த ரகசிய ஆவணங்களை நீக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டார்.

இதையடுத்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், இன்று உச்சநீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது.

தீர்ப்பில், ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் சீராய்வு மனுக்களை விசாரணைக்கு ஏற்ற உச்சநீதிமன்றம்,  பத்திரிகையில் வெளியான ஆவணங்களை விசாரிக்கக் கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை நிராகரித்து,  ரஃபேல் விவகாரத்தில் ஆவணங்கள் மீது விரிவான விசாரணை நடத்தப்படும் என்றும் கூறி உள்ளது.