டெல்லி:

ராதாபுரம் சட்டப்பேரவைத் தொகுதி மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடையை நீட்டித்து உச்சநீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு ராதாபுரம் தொகுதிக்கு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், அதிமுகவை சேர்ந்த இன்பதுரை, திமுக வேட்பாளர் அப்பாவுவை விட சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தேர்லில் வாக்கு எண்ணிக்கையின்போது, முறைகேடு நடை பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம், கடைசி 3 சுற்று வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவிட்டிருந்தது. அதைத்தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை பணிகள் கடந்த வாரம் நடைபெற்றது.

இதை எதிர்த்த்து, அதிமுக எம்எல்ஏ இன்பதுரை உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில், மறுவாக்கு எண்ணிக்கையை வெளியிட சென்னை உயர்நீதி மன்றத்துக்கு உச்சநீதிமன்றம் 13ந்தேதி (இன்ற) வரை  தடை விதித்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இன்பதுரை தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், செல்லாத ஓட்டுக்களை மீண்டும் எண்ணினால், தோல்வியடைய நேரும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மறுஎண்ணிக்கை முடிவை வெளியிட 22-ம் தேதி வரை தடையை நீடித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.