டெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குளறுபடியை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்றத்தின் நீதிபதி தலைமையில் விசாரணைக் குழுவை உச்சநீதிமன்றம் நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளது.

கடந்த வாரம் (ஜனவரி 5ந்தேதி) பஞ்சாப் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்குள்ள காலிஸ்தான் ஆதரவாளர்களால் ஏற்பட்ட சாலை மறியல் போராட்டம் காரணமாக மேம்பாலம் ஒன்றில் காத்திருக்க நேரிட்டது. இதனால் தனது பயணத்தை அவர் பாதியிலேயே முடித்துக்கொண்டு டெல்லி திரும்பினார். பிரதமர் நரேந்திர மோடிக்கு பஞ்சாப் மாநிலத்தில் பாதுகாப்பு குறைபாடு ஏற்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திலிருந்து சுமார் 30 கி.மீ. முன்பு பிரதமரின் வாகனம் மேம்பாலம் ஒன்றை அடைந்தபோது போராட்டக்காரா் கள் சிலா் சாலையை மறித்திருப்பது தெரியவந்தது. அவா்களின் மறியலால் மேம்பாலத்திலேயே அவா் 15-20 நிமிஷங்கள் காக்க வைக்கப்பட்டிருந்தார்.

பாதுகாப்புக் குறைபாட்டுக்குப் பிறகு பிரதமா் மோடி பதிண்டா விமான நிலையத்துக்கே திரும்பிச் சென்றுவிடலாம் என முடிவு செய்யப்பட்டது இதன் காரணமாக தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்ல முடியாதது மட்டுமன்றி, ஃபெரோஸ்பூரில் நடைபெறவிருந்த வளா்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவிலும் பிரதமரால் பங்கேற்க முடியவில்லை

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் நடைபெற்றது. இந்த விவகாரம் தொடர்பாக இந்த மனுவை தலைமை நீதிபதி என்.வி.ரமணா அடங்கிய 3 நீதிபதிகள் அமர்வு இன்று விசாரணை நடத்தியது.

அப்போது, பிரதமரின் பயண ஆவணங்களை பாதுகாத்து வைத்து கொள்ள பஞ்சாப் மற்றும் அரியானா நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து இன்று காலை மீண்டும் தலைமை நீதிபதி ரமணாவின் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்தியஅரசு, பஞ்சாப் மாநில அரசு அதிகாரிகளுக்க ஷோகாஸ் நோட்டீஸ் அனுப்பியது ஏன் என்று கேள்வி நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. அதற்கு மத்தியஅரசு வழக்கறிஞர் பதில் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, மத்திய – மாநில அரசுகளின் வாதங்கள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து,  மத்திய மற்றும் மாநில அரசுகளின் விசாரணைக் குழுக்கள் இந்த வழக்கில் விசாரணை செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்ட நீதிபதிகள்,  ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையில் நீதிமன்றத்தின் பார்வை கீழ் தனி விசாரணை குழு அமைக்கப்படும் என்று உத்தரவிட்டது.

இந்த விசாரணை குழுவில், சண்டீகர் காவல்துறை தலைவர், தேசிய புலனாய்வுத்துறை ஐஜி, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்ற பதிவாளர், பஞ்சாப் பாதுகாப்புப் பிரிவு கூடுதல் டிஜிபி ஆகியோர் இடம்பெறுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.