திருப்பதி: கோடை விடுமுறையையொட்டி, திருப்பதி கோவிலில்  பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால், வி.ஐ.பி. தரிசனம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.  இலவச தரிசனத்துக்காக பல ஆயிரம் பேர் காத்திருப்பதால், தரிசனத்துக்கு குறைந்தது 12மணி நேரம் ஆவதால், விஜபி தரிசனம் ரத்து செய்யப்படுவதாக தேவஸ்தானம் அதிகாரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய  திருப்பதி தேவஸ்தான அதிகாரி தர்மா ரெட்டி,  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக சாமி தரிசனத்தில் சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால், கோடைகாலம் முழுவதும் வி.ஐ.பி தரிசனத்திற்காக சிபாரிசு கடிதங்கள் ஏற்கப்படாது.  சாமியை தரிசிக்க ஏராளமானோர் வருவதால், வரிசையில் உள்ள பக்தர்களுக்கு தேவையான உணவு, நீர்மோர், குடிநீர் போன்றவை உடனுக்குடன் வழங்கப்படுகிறது.

மேலும், மாட வீதிகளில் பக்தர்கள் எளிதாக நடந்து செல்லும் வகையில்,  வெயிலின் தாக்கத்தை குறைக்க வெள்ளை நிற பெயிண்ட் பூசப்பட்டுள்ளது.  மேலும்,  அடிக்கடி தண்ணீரால் சுத்தம் செய்யப்படுகின்றன. மாடவீதிகள், நாராயணகிரி பகுதிகளில் கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன  என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  அனுமன் ஜெயந்தி உற்சவம் வருகிற ஜூன் 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. பெங்களூருவை சேர்ந்த மாணவி ஒருவர் 10 லட்சத்து ஆயிரத்து 116 கோவிந்த நாமங்களை பக்தியுடன் எழுதிக் கொண்டு வந்து காண்பித்தார். அவருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் வி.ஐ.பி தரிசன ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து, வருகிற 17-ந் தேதி முதல் 19-ந் தேதி வரை பத்மாவதி திருக்கல்யாணம் திருமலையில் வெகு சிறப்பாக நடத்தப்பட உள்ளது.

மே  22-ந் தேதி தரிகொண்டா வெங்கமாம்பாள்.ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது என்றார்.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 20.17 லட்சம் பக்தர்கள் சாமியை தரிசனம் செய்துள்ளனர். இதில் 8.08 லட்சம் பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். 39.73 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளது. 94.22 லட்சம் லட்டு பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.பக்தர்கள் சாமி உண்டியலில் ரூ.101.63 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.