டில்லி

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 20 வயது சுமன் ராவ் இந்த வருடத்த்தின் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஒவ்வொரு வருடமும் இந்திய அழகிப்போட்டி நடைபெற்று அதில் அந்த வருடத்துக்கான அழகியை தேர்வு செய்வது வழக்கமாகும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் இந்திய அழகி அந்த வருட பிரபஞ்ச அழகிப் போட்டியில் கலந்துக் கொள்ளும் தகுதி பெறுகிறார். இரண்டாவதாக வருபவர் உலக அழகிப் போட்டியில் கலந்துக் கொள்ளும் தகுதியை அடைகிறார்.

இவ்வாறு தொடர்ந்து உலக மற்றும் பிரபஞ்ச அழகிகளாக முன்பு இந்தியாவை சேர்ந்த சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய். பிரியங்கா சோப்ரா, லாரா தத்தா, யுக்தா முகி போன்றோர் தேர்வு ஆனார்கள். கடந்த 2017ஆம் வருடம் 17 வருடத்துக்கு பிறகு மீண்டும் மனிஷி சில்லார் தேர்வு செய்யபப்ட்டார்.

இந்த வருடத்துக்கான இந்திய அழகிப்போட்டியின் இறுதிச் சுற்று  கோலகலமான நடன நிகழ்வுடன் நேற்று நடந்தது. இந்த நடன நிகழ்வில் பாலிவுட் பிரபலங்களான காத்ரினா கைஃப், விக்கி கவுசல் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். அத்துடன் பிரபல தயாரிப்பாளர் கரண் ஜோகருடன் மனிஷ் பால் மற்றும் 2017 இன் உலக அழகி மனிஷி சில்லார் ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

இந்த போட்டியில் ராஜஸ்தானை சேர்ந்த 20 வயதுப் பெண்ணான சுமன் ராவ் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சென்ற வருட இந்திய அழகியான தமிழகத்தை சேர்ந்த அனுகீரீதி மகுடம் சூட்டினார். அத்துடன் இரண்டாம் இடத்தில் ஹரியானாவை சேர்ந்த ஷிவானி ஜாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த போட்டியில் பார்வையாளர்களாக பாலிவுட் பிரபலங்களான, ஹுமா குரேஷி, தியா மிர்ஸா, நேகா தூபியா, சித்ரங்கதா சிங் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர்.