தனது பல நாள் கனவு கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம்.

இந்தப் படத்தின் திரைக்கதையை மணிரத்னத்துடன் இணைந்து குமரவேலும் உருவாக்கியுள்ளார். வசனகர்த்தாவாக ஜெயமோகன் , சண்டைக் காட்சிகள் இயக்குநராக ஷாம் கெளஷல், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத், ஆடை வடிவமைப்பாளராக ஏகா லக்கானி, மேக்கப் கலைஞராக விக்ரம் கைக்வாத், நடன வடிவமைப்பாளராக பிருந்தா ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.

ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு கலை இயக்குநராக தோட்டாதரணி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் . இது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் உருவாக உள்ளது. லைகா நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்தின் பட்ஜெட் ரூ.800 கோடி என்று கூறப்படுகிறது. மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வைரமுத்து 12 பாடல்கள் எழுதுகிறார்.

விக்ரம், கார்த்தி, ‘ஜெயம்’ ரவி, விக்ரம் பிரபு, ரகுமான், ஐஸ்வர்யா ராய் பச்சன், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பிரபு, ஜெயராம், அஸ்வின், கிஷோர் , ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளார்கள்.

முதன்முறையாகப் படப்பிடிப்பு தளம் குறித்த தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார் சுஹாசினி மணிரத்னம்.

‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு தளம் குறித்து சுஹாசினி தனது ட்விட்டர் பதிவில், “படப்பிடிப்பைப் பார்த்தேன். அற்புதம். ஒவ்வொரு நடிகரும் சரி, அந்த அரங்கம், அந்த சூழல், அந்த மொழி என அனைத்தும் தனித்தரம்” என்று தெரிவித்துள்ளார்.