சென்னை:

’சூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. இதற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,

சூடான் தொழிற்சாலை தீ விபத்தில் 6 தமிழர்கள் உள்பட 18 இந்தியர்கள் உயிரிழந்த துயரச் செய்தி அடி மனதை உலுக்குகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கோர விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்வதுடன், தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் உறவினர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களைச் சந்தித்து உடனடியாகப் பெற்றுத் தர ஆவன செய்யுமாறு, கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திரு. டி.ஆர். பாலு அவர்களிடம் வலியுறுத்தியிருக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.