சேலம்: பத்திரப்பதிவுக்காக ரூ.50 ஆயிரம்  லஞ்சம் பெற்ற  சேலம் குகைப்பகுதியில் செயல்பட்டு வரும் சார்பதிவாளர் அலுவலகத்தின் சார்பதிவாளர் மற்றும் இடைத்தரகர்‘ லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.

. சேலம் மாவட்டம், தம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் பழனிவேல் (38). என்பவர்,  தாயின் பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு மாற்றுவதற்கான  தான செட்டில்மெண்ட் செய்வதற்காக, சேலம் அம்மாபேட்டையில் உள்ள ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்திற்கு  வந்து விசாரித்துள்ளார். அப்போது இடைத்தரகர் கண்ணன் என்பவர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால், சார் பதிவாளர் மூலம் தான செட்டில்மெண்ட் உடனடியாக செய்து தருவதாக கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பழனிவேல், சேலம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் செய்தார்.  புகாரின்பேரில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் ரசாயனம் தடவிய பணத்தை பழனிவேலிடம் கொடுத்து, இடைத்தரகர் கண்ணனிடம் வழங்குமாறு தெரிவித்தனர்.

அதன்படி பழனிவேல், அந்த பணத்தை நேற்று  மாலை இடைத்தரகர் கண்ணனிடம் வழங்கினார். அந்த பணத்தைப் பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கண்ணனை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.  இது தொடர்பாக, சார் பதிவாளர் செல்வபாண்டியையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் சேலம்  வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.