திருப்பூர்

திருப்பூர் அருகே ஒரு மாணவன் ஓடும் பேருந்தை நிறுத்தச் சொல்லியும் நிறுத்தாததால் கீழே குதித்து படுகாயம் அடைந்துள்ளான்/

சிவக்குமார் மற்றும் அவர் மனைவி பிரியா திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரை அடுத்த அணைப்பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் 10 வயது மகன் விஷ்ணு  குன்னத்தூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். அவன் அணைப்பதியில் இருந்து தினமும் பேருந்தில் பள்ளிக்குச் சென்று வந்தான்.

திருப்பூருக்கு குன்னத்தூரில் இருந்து தடம் எண்-10 அரசு பேருந்தும், தடம் 10 ஏ அரசு பேருந்தும் இயக்கப்படுகிறது. இதில் தடம் எண் 10 ஏ பஸ் குன்னத்தூரில் புறப்பட்டு அணைப்பதி, பெருமாநல்லூர் வழியாக திருப்பூர் செல்லும். ஆனால் தடம் எண் 10 பேருந்தானது குன்னத்தூரில் புறப்பட்டு ஆதியூர், பெருமாநல்லூர் வழியாக அணைப்பதி போகாது திருப்பூர் சென்று சேரும்.

விஷ்ணு நேற்று முன் தினம் மாலை பள்ளி முடிந்ததும் ஊருக்குச் செல்வதற்காக குன்னத்தூர் பேருந்து நிலையத்திற்கு விஷ்ணு வந்தபோது அங்குத் தடம் எண் 10 டவுன் பேருந்து நின்று கொண்டிருந்தது. பேருந்தில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் விஷ்ணு, அவசரத்தில் அணைப்பதி வழியாகச் செல்லாத தடம் எண் 10-ம் நம்பர் ஏறியுள்ளான்.

பேருந்து சிறிது தூரம் சென்றதும்  வேறு தடத்தில் செல்வதைப் பார்த்த சிறுவன் அதிர்ச்சியடைந்து பேருந்தை நிறுத்தும்படி நடத்துநரிடம் கெஞ்சினான். ஆனால் பலமுறை கூறியும் பஸ்சை நிறுத்தாமல் சென்றதால் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த விஷ்ணு ஓடும் பேருந்தில் இருந்து கீழே குதித்தான்.

இதனால் பலத்த காயமடைந்து வலியால் துடித்த  அவனை அப்பகுதி பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குன்னத்தூர் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பள்ளி மாணவனிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.  விஷ்ணு கொடுத்த தகவலின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட பேருந்தில் பணியிலிருந்த ஓட்டுநர்-நடத்துநர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.