சென்னை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க  தடை விதித்தது. இது  தமிழக மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி, வேதாந்தா குழுமம்  தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம், ஆலையைத் திறக்க கடந்த டிசம்பர் மாதம் 15-ம் தேதி உத்தர விட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இன்று  தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தின் உத்தரவை ரத்து செய்தும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்புக்கு தமிழக அரசியல் கட்சிகள்  பெரும் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்தது தமிழக மக்களின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக விஜயகாந்த் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,  “ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேதாந்தா நிறுவனம் வலியுறுத்தியதற்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மக்கள் போராட்டத்திற்கும், ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய 13 அப்பாவி உயிர்களின் தியாகத்திற்கும் கிடைத்த மிகப்பெரிய வெற்றி. எனவே உச்ச நீதிமன்றம் அப்பகுதி மக்களின் உணர்வுகளை மதித்து, ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருப்பதை தேமுதிக சார்பில் வரவேற்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.