வன்னியர் இட ஒதுக்கீடு செல்லாதா? : மேல் முறையீடு செய்ய உள்ள தமிழக அரசு

இந்த சமுதாயத்தில் இட ஒதுக்கீடு என்பது, மிகவும் பின் தங்கி உள்ள சமுதாயங்களைத் தூக்கி நிறுத்தும் சமூக நீதி!

அதிலும் சமூக நீதி என்பது தமிழகத்தின் உயிர்நாடி! நீதிபதி சட்டநாதன் கமிஷன்,நீதிபதி அம்பாசங்கர் கமிஷன் ஆகிய, தமிழக அரசு ஆணையங்கள், தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் உள்ள வன்னியர் சமுதாயத்துக்கு அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு செய்யலாம் என்று பரிந்துரைத்தன!

இவற்றை அடிப்படையாக வைத்துச் தான் 1989 ஆம் ஆண்டில் கலைஞர் மு. கருணாநிதி ஆட்சியில் வன்னியர்கள் உள்ளிட்ட 108 சமுதாயத்தினரையும்(சீர்மரபினர் உள்ளிட்ட) சேர்த்து 20 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்து சட்டம் நிறைவேற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப் பட்டது!

ஆனால், 11 வருடங்கள் கழித்து வழக்கறிஞர் சி. என். ராமமூர்த்தி தொடர்ந்த வழக்கில், “இந்த இட ஒதுக்கீடு போதாது… வன்னியர் களுக்கு உள் ஒதுக்கீடு வேண்டும் “என்று கோரிக்கை வைத்தார்.

இதை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், ” வன்னியர்களுக்கு 14.5 வரை உள் ஒதுக்கீடு வழங்கலாம்” என்று பரிந்துரைத்தது!

இந்தப் பரிந்துரையை ஒட்டித் தான் 21.2.2021 அன்று அன்றைய எடப்பாடி அரசு வன்னியர் களுக்கு 10.5 சதவீதம் அறிவித்து அதை நடைமுறைப் படுத்தியது!

இதை எதிர்த்து சிலர், ” தனிப்பட்ட சமுதாயத்துக்குத் தனி ஒதுக்கீடு தரக் கூடாது! ” என்று வழக்குத் தொடர்ந்து, அதை விசாரித்து, கடந்த 1.11.2021 அன்று அளித்த தரப்பில், ” சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தித் தான் இட ஒதுக்கீடு வழங்க முடியும்… எனவே இந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு செல்லாது! ” என்று அதிரடித் தீர்ப்பு அளித்து இருக்கிறது!

இதைத் தொடர்ந்து தமிழக அரசு மேல்முறையீடு செய்ய இருக்கிறது!

இந்தத் தீர்ப்பும்… இதன் அடுத்த நடவடிக்கைகளும் ஒருபுறம் இருக்கட்டும்!

சும்மா வந்திட வில்லை இந்த இட ஒதுக்கீடு! வன்னிய மக்களின் பல கட்டப் போராட்டங்கள்… இறுதியாக 1987 ஆம் ஆண்டு நடந்த ஒரு வார சாலை மறியல் போராட்டத்தில் இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தைத் தன்னெழுச்சியோடு முன்னெடுத்துப் போராடிய வன்னிய மக்கள் மீது போலீசார் சுட்டதில் 21 க்கும் மேற்பட்டோர் உயிர்த்தியாகம் செய்தனர்!

மேலும்.. போராடிய அந்த மக்கள் ஒரு லட்சம் பேர் மீது தடியடி.. வழக்குகள்… கை, கால்… மண்டை உடைப்பு.. வாழ்வாதாரங்கள் இழப்பு…

இத்தனை பேரின் தியாகங்களுக்குப் பின்னர் கிடைத்தது தான் இந்த இட ஒதுக்கீடு!!

இந்த வரலாற்றை மக்கள் அறிவார்கள்!

—- ஓவியர் இரா. பாரி.