சென்னை: தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை குறித்து, அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான 13 பேர் கொண்ட குழுவுடன்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

மத்தியஅரசின் தேசிய கல்விக்கொள்கைக்கு எதிராக தமிழக அரசு மாநில கல்விக்கொள்கையை உருவாக்குகிறது. இது தொடர்பாக,  டெல்லி உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி த.முருகேசன் தலைமையில் கல்விக் கொள்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் உறுப்பினர்களாக,  சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எல்.ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் இராமானுஜம், மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், யூனிசெஃபின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் இரா.பாலு, அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த குழுவினருக்கு, தமிழக அரசின் முற்போக்கு திட்டமான,  அனைவருக்கும் உயர் கல்வி, தேர்வு முறைகளில் சீர்திருத்தம் உள்ளிட்ட 10 வழிகாட்டுதல்களை அடிப்படையாகக் கொண்டு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி அரசாணை வெளியிட்டுள்ளது.  மேலும், ஓராண்டில் மாநிலக் கல்விக் கொள்கையை தயார் செய்து இறுதி அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாநில கல்விக் கொள்கையை வடிவமைக்கும் குழுவினர் தலைமைச் செயலகத்தில் முதல்வரை ஸ்டாலினை இன்று சந்தித்து சந்தித்துப் பேசினர். இதனைத் தொடர்ந்து கல்விக் கொள்கை குழுவின் முதல் கூட்டம் நடைபெற்றது. விரைவில் கல்விக் கொள்கை தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும் என்று கூறப்படுகிறது.