மதுரை: தமிழ்நாடு அரசு ஏற்கனவே அறிவித்துள்ளபடி, குடும்பத்தலைவிகளுக்கு, மாணவிகளுக்கு விரைவில் ரூ.1000 உதவித்தொகை வழங்கப் படும் என  அமைச்சர்கள் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், கீதா ஜீவன் அறிவித்து உள்ளனர்.

திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ள, குடும்பத் தலைவிகளுக்கு விரைவில் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்பு குறித்த எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில்,  மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று தெரிவித்தார்.

மேலும், ரூ.1000 ஊக்கத்தொகை தரும் திட்டத்திற்காக விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தவர், திமுக  தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அனைத்தையும் திமுக அரசு ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது என்றும் கூறினார்.

முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி  சென்னை அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், உயர்கல்வி உறுதித்திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு உதவித்தொகை ரூ.1000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் இருப்பதாக தெரிவித்தார்.

முதியோர்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது முதியோர்களுக்கான தனி கொள்கை வடிவமைக்கப்பட்டு வருகிறது விரைவில் வெளியிடப்படும் என தெரிவித்தார்.  அடுத்த 5 ஆண்டுகளில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் தொலைநோக்குடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதியோர் இல்லங்களே கூடாது என்பதே அரசின் எண்ணம். ஆனால் சூழல் அப்படி இல்லை தனியாக இருப்பது முதியோர்களுக்கு பாதுகாப்பில்லை என்பதால், முதியோர் இல்லங்களைத் தேடி பலர் வருகின்றனர்.

18வயதில் சிலர் காதல் திருமணம் செய்துகொள்வதும் குழந்தைத் திருமணம் என்றே கருதப்படுகிறது. குழந்தைத் திருமணத்தைத் தடுக்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் விரைவில் நிலைமை மாறும் என தெரிவித்தவர், குழந்தை திருமண எண்ணிக்கையும்  குறையும் என தெரிவித்தார்.  1 முதல் 5 ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார் என்றார்.

மேலும், சத்துணவு முட்டை டெண்டரில் கிறிஸ்டி நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான தரவுகள், புகார்கள் ஏதும் அரசிடம் இல்லை தொடர்ந்து டெண்டர் கோரும் நிறுவனங்கள் பட்டியலில் கிறிஸ்டி நிறுவனமும் உள்ளது. விலைப்பட்டியலைப் பொறுத்து டெண்டர் ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தமிழகஅரசின் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம் உயர்கல்வி உறுதி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. இதனடிப்படையில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகள், கல்லூரி, பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர்ந்து படிக்கும்போது அவர்களுக்கு மாதம்தோறும் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.