மதுரை:

திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டு வரும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், திமுக தலைவர் ஸ்டாலினின் கனவு பலிக்காது என்று கூறியவர், தேர்தலில் வரப்போகும் தோல்வி பயத்தை மறைக்கவே மனைவி யுடன் சுற்றுலா சென்றுள்ளார்  என்று விமர்சித்தார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் எம்.சி. சம்பத் ஆகியோர் மதுரை பெருங்குடி பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அங்கு தேர்தல் பொதுக்கூட்டத்தில்  பேசிய அமைச்சர் உதயகுமார், 23ம் தேதிக்கு பிறகு திமுக ஆட்சியை அமைப்போம் என்று கூறும் திமுக தலைவர் ஸ்டாலின் கனவு பலிக்காது, தேர்தலில் திமுக படுதோல்வி அடையும், அந்த  தோல்வி பயத்தை மறைக்கவே மனைவியுடன் ஸ்டாலின் சுற்றுலா சென்றுள்ளதாக விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய அமைச்சர் எம்.சி.சம்பத், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை விட தமிழ் bநாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகம் என்று கூறியதுடன், ஜெயலலிதாவின் விஷன் 2023 திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றும் கூறினார்.

கடந்த இரண்டு மாதங்களாக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,  சமீபத்தில் தனது மனைவியுடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார். இதுகுறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது.

இந்த நிலையில் தோல்வி பயத்தை மறைக்கவே மனைவியுடன் ஸ்டாலின் சுற்றுலா சென்றுள்ள தாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் விமர்சித்துள்ளார்.