சென்னை:  திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைந்து ஓராண்டு நிறைவு பெற்றுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி இல்லத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து சென்னை மெரினாவில்  கருணாநிதி நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செய்தார்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்றது., திமுக தலைமையிலான  மதசார்பற்ற கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து,  10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்தது. கடந்த மே மாதம் 7ம் தேதி தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார்.

அவரது தலைமையிலான திமுக அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்தது. இதையொட்டி, முதல்வர் ஸ்டாலினுக்கு  கூட்டணி கட்சியினர் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று காலை  சென்னை மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்திற்கு சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மரியாதை செலுத்தினார். முன்னதாக கருணாநிதி வாழ்ந்து வந்த கோபாலபுரம் வீட்டுக்கு சென்றவர், அவங்க அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  கருணாநிதி படத்துக்கு மலர் தூவி முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடமும் வாழ்த்து பெற்றார்.

பின்னர், சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கலைஞர் நினைவிடத்திற்கு சென்று இங்குள்ள அண்ணா, கலைஞர் நினைவிடங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து,   மு.க,ஸ்டாலின் ஓராண்டு சாதனை புத்தகத்தை வெளியிட்டார். திமுக ஆட்சியில் மாதம் தோறும் செய்த சாதனைகளை 12 புத்தகங்களாக முதல்வர் வெளியிட்டார்.‘

இன்று கருணாநிதி சமாதியானது,  தலைமைச் செயலக வடிவில் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.  அதில் முதல்வராய் ஓராண்டு;  முதன்மையாய் நூறாண்டு காப்போம் என்று வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.