சென்னை: கோவையில் அமைச்சர் வேலுமணியை விமர்சித்த திமுக பிரமுகர் முத்துலிங்கம் கைது கண்டனத்திற்குரியது, இதுபோன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தால் நானே கோவை வந்து போராட்டம் நடத்துவேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் கூறி இருக்கிறார்.

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணியை விமர்சித்ததற்காக திமுகவினரை காவல்துறை கைது செய்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

அதில், அவர் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் உள்ள அரசூர் பஞ்சாயத்தில் நடைபெற்ற முதல் கிராம சபைக் கூட்டத்தில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பற்றி பேசியதற்காக, திமுக முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் ஏ.வி. முத்துலிங்கத்தைக் கைது செய்திருப்பதற்கு கடும் கண்டனத்துக்குரியது.

கிராமசபை என்பது மக்களின் சுதந்திரமான கருத்துகளை, எண்ணங்களை உள்ளது உள்ளபடிப் பிரதிபலிக்கும் மிக முக்கியமான கருத்துக்கேட்கும் கூட்டம். அந்தக் கூட்டத்தில் ஒரு முன்னாள் கவுன்சிலர் என்ற முறையில் உரிமையுடன் ஒரு கருத்தைக் கூறும் போது, அதில் உள்ள நியாயத்தை உணர்ந்து , அதன் மீது நடவடிக்கை எடுத்து, தீர்வு காண்பதுதான் உள்ளாட்சித் துறை அமைச்சரின் பணி.

ஆனால் இங்கே உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியின் தலையில் அதிகாரம் என்ற ஆணவம் ஏறிக் கூடுகட்டிக் கொண்டிருப்பதால், அவரை எதிர்த்துப் போராடினாலோ, குறை சொன்னாலோ, கைது என்ற அடக்குமுறையை ஏவி விடுவது மிகவும் வெட்கக்கேடானது.

அண்மைக் காலமாக கோயம்புத்தூரிலும், தமிழகத்தின் வேறு பகுதிகளிலும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கு எதிராக, ஏதேனும் உண்மைச் செய்தியை வெளியிட்டால் பத்திரிகையாளரை கைது செய்வது, வழக்குப் போட்டால் குண்டர் சட்டத்தில் அடைப்பது, எதிர்த்துப் பேசும் திமுகவினரைச் சிறைப் பிடிப்பது என அட்டூழியத்திலும் அராஜகமான நடவடிக்கைகளிலும் சில காவல்துறை அதிகாரிகள் பேயாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

குறிப்பாக, கோவைப் பகுதியில் உள்ள காவல்துறையினர், உள்ளாட்சித் துறை அமைச்சரின் தனியார் செக்யூரிட்டி அதிகாரிகள் போல் செயல்படுகிறார்கள் என்பது தமிழக காவல்துறைக்கே தலைகுனிவாக அமைந்திருக்கிறது.

போலீஸ் துறையின் அறிவிக்கப்படாத துறை அமைச்சராக, தன் கட்டளை கேட்டு நடப்பவர்களைத் தேர்ந்தெடுத்து மாவட்டத்திற்கு மாறுதல் அனுமதி கொடுப்பவராக, வேலுமணி செயல்படுகிறாரா என்ற சந்தேகம் நேர்மையான போலீஸ் அதிகாரிகளுக்கும், கோவை மக்களுக்கும் எழுந்துள்ளது.

அமைச்சர் பதவிக்கு எஞ்சியிருக்கும் காலம் இன்னும் பதினெட்டு மாதங்கள் தான். அதன் பிறகு அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்காக இப்போது பொய் வழக்குப் போடும் காவல்துறை அதிகாரிகளும், அவருடைய தூண்டுதலின் பேரில் வரும் புகார்கள் மீது எல்லாம் திமுகவினரைக் கைது செய்து துன்புறுத்தும் காவல்துறை அதிகாரிகளும், நிச்சயம் சட்டப்படியான நடவடிக்கையில் இருந்து தப்ப முடியாது.

சட்டத்தின் ஆட்சியை அமைச்சரின் ஆணைக்கேற்ற சர்வாதிகார ஆட்சியாக மாற்றும் அநியாயத்திற்கு, காவல்துறை கிஞ்சித்தும் துணை போகக்கூடாது. அப்படித் துணை போய், ஒழுக்கக் கேடு தாராளமாக உள்ளே நுழைந்து விடாமல், தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு காவல்துறைத் தலைவர் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

உள்ளாட்சித் துறை அமைச்சரை எதிர்த்து விமர்சிப்பதற்காக, போராடுவதற்காக இனிமேலும் திமுகவினர் கைது செய்யப்பட்டால், நானே கோவைகு வந்து, மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று ஸ்டாலின் அந்த அறிக்கையில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.