சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மார்ச் 24ம் தேதி நடக்க இருந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. தேதி குறிப்பிடப்படவில்லை என்றாலும், ஏப்ரல் இறுதியில் தேர்வு நடக்கும் என்று தகவல்கள் வெளியாகின.

அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக பேசுகையில், 10ம் வகுப்பு மதிப்பெண்கள், உயர்கல்விக்கு முக்கியமான ஒன்று, எனவே தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்றார்.

இந் நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு மே 3வது வாரத்தில் நடக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதே தவிர, ரத்து செய்யப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது.

பொதுத்தேர்வு தள்ளிப்போவதால், அடுத்தடுத்து நடக்கும் தேர்வு மற்றும் பள்ளி சார்ந்த பணிகளும் தள்ளிப்போகும் நிலை உருவாகி இருக்கிறது.