சென்னை: எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 106-ஆவது பிறந்தநாளையொட்டி, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.

வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு குரல் கொடுத்தவர எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியார் என்றும், அவரது  பிறந்த நாளில் சமூகநீதிக்கான அவரது பங்களிப்பை நாம் போற்றுவோம் என்றுதெரிவித்துள்ளார். அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வன்னிய மக்களின் சமூகநீதிக்காக இந்தியா விடுதலை அடைந்த காலத்திலேயே குரல் கொடுத்த உழைப்பாளர் என குறிப்பிட்டுள்ளார்.

சிவ சிதம்பர ராமசாமி படையாச்சி எனப்படுத்ம எஸ்எஸ் இராமசாமி படையாட்சி   இந்திய சுதந்திரப் போராட்ட வீரராகவும், சுதந்திரத்திற்கு பிறகு, தமிழக அரசியல்வாதியாகவும் திகழ்ந்தார்.  தமிழக அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றி மக்கள் சேவையாற்றியதுடன்,  மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். இவரின் பெயரே விழுப்புரம் மாவட்டத்தின் முந்தைய பெயராகும்.

1954ல் காமராஜர் முதல்வரான பின்னர் ராமசாமி அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். 1954ல் அவர் தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார். 1962 சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது காங்கிரசிலிருந்து விலகிய ராமசாமி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். தேர்தலில் சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவர் உட்பட இக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். 1967 தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார். ஆனால் திமுக தன் கூட்டணியில் இக்கட்சியை சேர்த்துக்கொள்ள மறுத்துவிட்டது. சிறிது காலத்துக்குப் பின்னர் ராமசாமி கட்சியை மீண்டும் கலைத்து விட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்துவிட்டார். 1980 மற்றும் 1984 பொதுத்தேர்தல்களில் காங்கிரசு சார்பாக திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992 இல் மரணமடைந்தார்.

இவர்,  1951 இல் வன்னிய  இன மக்களை ஒன்றிணைக்கும் நோக்கில் வன்னியர் சங்கம் ஒரு சாதி மாநாட்டைக் கூட்டி வன்னியருக்காக ஒரு மாநிலந்தழுவிய கட்சியினை உருவாக்க முயன்றார். . ஆனால்  அந்த முயற்சி வெற்றி பெறவில்லை. மாறாக வட ஆற்காடு மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செல்வாக்கு பெற்றிருந்த எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர் காமன்வீல் கட்சியினைத் தொடங்கினார்.

தென்னாற்காடு மற்றும் சேலம் மாவட்ட வன்னியர்கள் ராமசாமி படையாச்சியின் தலைமையில் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி என்ற மற்றொரு கட்சியைத் தொடங்கினர். ராமசாமி படையாட்சி உட்பட 19 உழைப்பாளார் கட்சி வேட்பாளர்கள் 1952 தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

விடுதலைப் போராட்ட வீரர் எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் பிறந்தநாள் குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,  இளம் வயதிலேயே இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். இராமசாமி படையாட்சி யாரின் 106-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. உழவர் உழைப்பாளர் கட்சியை நிறுவிய அவர், அக்கட்சியின் மூலம் வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு குரல் கொடுத்தவர். அவரது பிறந்த நாளில் சமூகநீதிக்கான அவரது பங்களிப்பை நாம் போற்றுவோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், எஸ்.எஸ். இராமசாமி படையாட்சியாரின் 106-ஆவது பிறந்தநாளில் அவரை வணங்குவோம்!!உழைக்கும் குடியான வன்னிய மக்களின் சமூகநீதிக்காக இந்தியா விடுதலை அடைந்த காலத்திலேயே குரல் கொடுத்த உழைப்பாளர் மக்கள் கட்சியின் நிறுவனர் எஸ்.எஸ்.இராமசாமி படையாட்சியார் அவர்களின் 106 ஆவது பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவரது பணிகளையும், சிறப்புகளை போற்றுவோம்… வணங்குவோம்! என்று குறிப்பிட்டுள்ளார்.