சென்னை: ஐசிசி உலகக் கோப்பை 2023 போட்டியானது  இந்தியாவில் உள்ள அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பிரமாண்டமாக தொடங்க உள்ள நிலையில்,  வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்பட உள்ள உலக கோப்பை சென்னையில் 2 நாள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. அதன்படி, இன்றும், நாளையும், ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் உலக கோப்பை  வைக்கப்படுகிறது.

நடப்பு ஆண்டுக்கான (2023) ஐசிசி உலகக் கோப்பை போட்டி  இந்தியாவில் நடைபெற உள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் அமகபாத்தில்  உள்ள   நரேந்திர மோடி மைதானத்தில் உலக கோப்பை போட்டி அக்டோபர் 5ம் தேதி தொடங்குகிறது.

ஐசிசி உலகக் கோப்பை போட்டி  முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையே நடைபெறவுள்ளது. அதனை தொடர்ந்து அக்டோபர் 6ம் தேதி பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது ஹைதராபாத்தில் நடைபெறுகிறது.

இந்த நிலையில், உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் உலகக் கோப்பை உலகம் முழுவதும் கடந்த சில வருடங்களாக சுற்றி வந்தது.  அதன்படி, தற்போது  உலகக் கோப்பை இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தது.

சென்னை வந்து இறங்கிய உலகக் கோப்பைக்கு சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் உள்ள தமிழ்நாடு கிரிக்கெட் சங்க கிளப் அரங்கில் வைக்கப்பட்டு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் ஆர்.ஐ.பழனி, பொருளாளர் ஸ்ரீனிவாச ராஜூ, உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா, உதவி தலைவர் ஆடம் சேட், இணை செயலாளர் சிவகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு உலகக் கோப்பையை உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து,   உலகக் கோப்பை இன்றும், நாளையும் பொதுமக்கள் பார்வையிடுவதற்காக ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் வைக்கப்படுகிறது. பின்னர் இந்த கோப்பை பெங்களூர் எடுத்துச்செல்லப்பட்டு, அங்கு இரண்டு நாட்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப் பட இருப்பதாக கூறப்படுகிறது.

முன்னதாக, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) லீக் நிலை போட்டிகளுக்கான ஆட்ட அதிகாரிகளின் பெயர்களை மட்டும் அறிவித்துள்ளது. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கான போட்டி நடுவர்கள் மற்றும் நடுவர்களின் பெயர்கள் பின்னர் அறிவிக்கப்படும். ஐசிசி வெளியிட்டுள்ள 20 போட்டி அதிகாரிகளில் 16 நடுவர்கள் மற்றும் 4 போட்டி நடுவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இதில், 12 நடுவர்கள் ஐசிசி எலைட் பேனலில் இருந்தும், 4 பேர் ஐசிசி வளர்ந்து வரும் நடுவர்கள் குழுவின் ஒரு பகுதியாகவும் உள்ளனர்.

ICC ODI உலகக் கோப்பை 2023 க்கான நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்களின் பட்டியல்:

எலைட் பேனல் நடுவர்கள் – கிறிஸ்டோபர் காஃப்னி (நியூசிலாந்து), குமார் தர்மசேனா (இலங்கை), முர்ரே எராஸ்மஸ் (தென்னாப்பிரிக்கா), மைக்கேல் கோஃப் (இங்கிலாந்து), நிதின் மேனன் (இந்தியா), பால் ரெய்பெல் (ஆஸ்திரேலியா), ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (இங்கிலாந்து), ரிச்சர்ட் கெட்டில்ப்ரோ (இங்கிலாந்து), ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா), ஜோயல் வில்சன் (மேற்கிந்திய தீவுகள்), அஹ்சன் ராசா (பாகிஸ்தான்), அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக் (தென் ஆப்பிரிக்கா).

வளர்ந்து வரும் குழுவின் நடுவர்கள் – ஷரபுத்தவுலா இப்னே ஷாஹித் (வங்காளதேசம்), பால் வில்சன் (ஆஸ்திரேலியா), அலெக்ஸ் வார்ஃப் (இங்கிலாந்து) மற்றும் கிறிஸ் பிரவுன் (நியூசிலாந்து).

போட்டி நடுவர்கள்: ஜெஃப் குரோவ் (நியூசிலாந்து), ஆண்டி பைக்ராஃப்ட் (ஜிம்பாப்வே), ரிச்சி ரிச்சர்ட்சன் (மேற்கிந்திய தீவுகள்), ஜவகல் ஸ்ரீநாத் (இந்தியா)