ராமநாதபுரம்: தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு  நடத்தியதில் 2 மீனவர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்  13 மீனவர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 13 பேரை கைது செய்த இலங்கை கடற்படை. கைது நடவடிக்கைக்கு அஞ்சி தப்ப முயன்றதாக கூறி மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தி உள்ளது. இந்த  துப்பாக்கிச்சூட்டில் 2 மீனவர்கள் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வது தொடர்கதையாகி வருகிறது.  கைது செய்யப்படும் மீனவர்கள் சமயங்களில் மீனவர்கள் சிறையில் அடைக்கப்படுவதும் உண்டு.  சமீப காலமாக படகுகளையும் சேர்த்து பறிமுதல் செய்து வரும் இலங்கை அரசு அந்த படகுகளை விடுவிக்க மறுத்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன.

இதற்கிடையே, கடந்த 25ம் தேதி இரவு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 18 மீனவர்கள் கைது செய்யப்பட்ட நிலை யில், குடியரசு தினமான நேற்று அதிகாலை 16 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர். அடுத்தடுத்து 34 மீனவர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு சமீபத்தில் கடிதம் எழுதி இருந்தார்.

இந்த நிலையில்,  நேற்று மீன்பிடிக்க சென்ற தமிழ்நாட்டு மீனவர்கள் 13 பேர் இன்று அதிகாலை கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,  அப்போது அங்கு ரோந்து பணிக்கு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை கைது செய்தனர். மேலும் அவர்களின் விரைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.