சென்னை; பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை மக்களுக்காக தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கப்படும் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்து உள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையில் வாழும் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். பல தமிழர்கள் அங்கிருந்து அகதிகளாக தமிழகம் வந்து கொண்டிருக்கின்றனர். இதையடுத்து, இலங்கை தமிழர்கள் உள்பட அங்கு வசிக்கும் மக்களுக்கு இந்திய அரசு பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. அத்துடன் தமிழகஅரசும் முயன்ற உதவிகளை செய்ய முன்வந்துள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வர் பொதுமக்களிடம் நிதி வேண்டி கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கை மக்களுக்கு தமிழக காங்கிரஸ் சார்பில் ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ள கேஎஸ் அழகிரி  தமிழக மக்கள் அனைவரும் நிதியுதவி வழங்குகிற முயற்சியில் ஈடுபட வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை மக்களுக்கு உதவ நிதி வழங்குமாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்ததோடு, தி.மு.க. சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதியுதவி வழங்குவதாக அறிவித்திருப்பதை வரவேற்க கடமைப்பட்டிருக்கிறேன். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த காலங்களில் இலங்கை தமிழர்கள் பெரும் இன்னல்களை பெருமளவில் அனுபவித்திருக்கிறார்கள்.

கடந்த பிப்ரவரி மாதம் 1987ம் ஆண்டு, அன்றைய இலங்கை அரசு யாழ்ப்பான பகுதி முழுவதற்கும் பொருளாதார தடையை விதித்தது. ராணுவத்தின் மூலமாக தாக்குதலை நடத்தியது. இதனால் இலங்கையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழ்கிற தமிழர்கள் அத்தியாவசிய பொருட்கள் பற்றாக்குறை காரணமாக கடும் அவதிக்கு உள்ளானார்கள்.

இலங்கை தமிழர்களின் துயரை துடைப்பதற்காக பிரதமர் ராஜிவ்காந்தி ஆணையிட்டதன் பேரில், ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து உணவுப் பொருட்கள், எரிபொருள் ஏற்றிய 19 படகுகள் ஜூன் 1987 அன்று இலங்கையின் வடக்கு பகுதிக்கு அனுப்பப்பட்டன. ஆனால், நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வந்த படகுகளை இலங்கை அரசின் கடற்படை அனுமதிக்காமல் தடுத்து விட்டது.

இதனால், நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற இந்திய அரசின் படகுகள் ராமேஸ்வரம் நோக்கி திரும்பி வர வேண்டிய நிலை ஏற்பட்டது.

பொருளாதாரத் தடையினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் எந்த வகையிலாவது உதவிகளை செய்ய வேண்டுமென்று அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தி முடிவெடுத்தார். அதன்படி, பெங்களுர் விமான தளத்தில் இருந்து பாதுகாப்புடன் அனுப்பப்பட்ட 5 இந்திய விமானங்கள், இலங்கையின் ஆகாய பகுதிக்குள் பாராசூட் மூலம் அத்துமீறி பிரவேசித்து வடக்கு மாகாணத்தில் வாழ்கிற இலங்கை தமிழர்களுக்கு 24 டன் நிவாரணப் பொருட்கள் பூமியை நோக்கி மக்கள் பெறுகிற வகையில் கீழே போடப்பட்டன.

உண்ண உணவின்றி அல்லலுற்ற அப்பாவித் தமிழர்கள், இந்திய அரசு வழங்கிய உணவுப் பொருட்களைப் பெற்று மகிழ்ச்சிக் கடலில் திளைத்ததோடு, உணவின்றி வாடிய நிலையில் உணவளித்த இந்திய அரசுக்கு இலங்கை தமிழர்கள் நன்றி தெரிவித்தனர். இந்த நடவடிக்கை ஆபரேஷன் பூமாலை என்று அழைக்கப்பட்டது.

பிற்காலத்தில் இலங்கை அரசு இந்திய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி அன்றைய பிரதமர் ராஜிவ்காந்தி அவர்களுடன் உடன்பாடு காண இந்த நடவடிக்கை வழிகோலியது. எப்பொழுதெல்லாம் இலங்கை தமிழர்கள் மற்றும் மலையக தமிழர்களுக்கு இன்னல்கள் ஏற்படுகிறதோ, அப்பொழுதெல்லாம் மத்தியில் ஆட்சி செய்கிற காங்கிரஸ் அரசு பல்வேறு உதவிகளை செய்து வந்திருக்கிறது.

அதைப் போல, இன்றைக்கு தமிழகத்தில் மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சியை நடத்தி வருகிற முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இலங்கை தமிழர்கள் எதிர்கொள்கிற இன்னல்களை போக்கிடும் வகையில் நிவாரணப் பொருட்களை தமிழக அரசு சார்பில் வழங்குவதோடு, தி.மு.க.வின் சார்பில் நிதி வழங்குகிற முயற்சிக்கு தமிழ்நாடு காங்கிரஸ் துணை நிற்க விரும்புகிறது.

மேலும், தமிழக முதலமைச்சரின் அறிவிப்புகளுக்கு ஈடுகொடுக்கிற வகையில் தமிழக மக்கள் அனைவரும் நிதியுதவி வழங்குகிற முயற்சியில் ஈடுபட வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.