சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீக்காய சிறப்பு சிகிச்சை வார்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

நாளை மறுதினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, பொதுமக்கள் பட்டாசு கொளுத்தி தங்களது சந்தோஷத்தை வெளிப்படுத்துவர். இதனால் சிலருக்கு எதிர்பாராமல் தீக்காயம் ஏற்படும் வாய்ப்பும் உண்டு. இதையொட்டி,  12 படுக்கைகளுடன் கூடிய தீக்காய சிறப்பு சிகிச்சை வார்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறிய மருத்துவமனை ‘டீன்’ டாக்டர் சாந்திமலர்,  தீபாவளி பண்டிகையையொட்டி எதிர்பாராமல் ஏற்படும் தீக்காயத்துக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு தீக்காய வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.  இந்த சிறப்பு தீக்காய வார்டு 24 மணி நேரமும் முழுமையாக செயல்படும்.

ஏற்கனவே கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் 70 படுக்கைகளுடன்  கூடிய தீக்காய சிகிச்சை வார்டு செயல்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக இந்த சிறப்பு தீக்காய வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சிறப்புவார்டில், தீக்காய சிகிச்சை துறை தலைவர் டாக்டர் ரமாதேவி தலைமையில், 22 டாக்டர்கள், 21 நர்சுகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். தீக்காய சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருத்துவ வசதிகளும் இங்கு செய்யப்பட்டுள்ளது.

தீக்காயம் ஏதும் ஏற்பட்டால் தண்ணீரால் காயத்தை கழுவியபின், சுத்தமான பருத்தி துணியை வைத்து சுற்றி அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறவேண்டும்.

தீக்காயம் ஏற்பட்ட உடனே அதன்மீது வீட்டில் உள்ள எண்ணெய், காபி தூள், மஞ்சள் தூள், பேனா மை உள்ளிட்டவைகளை தடவக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.