திருச்சி
சென்னை எழும்பூருக்கு மண்டபத்தில் இருந்து வரும் 19 ஆம் தேதி அன்று சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
நடந்து முடிந்த பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர் செல்லும் பொதுமக்களின் வசதிக்காக, சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்கியது. பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை வருகிற 19 ஆம் தேதி நிறைவடைகிறது.
எனவே, சொந்த ஊர் சென்ற பொதுமக்கள், மீண்டும் திரும்பும் வகையில் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி வருகிற 19-ந்தேதி இரவு 10 மணிக்கு மண்டபத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு சிறப்பு விரைவு ரயில் (வண்டி எண்: 06048) இயக்கப்படுகிறது.
ராமநாதபுரம், பரமகுடி, மானாமதுரை, சிவகங்கை, கல்லல், காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர் துறைமுகம், பண்ருட்டி, விழுப்புரம், திண்டிவணம், மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை எழும்பூரை சென்றடையும் இந்த ரயிலில் 3 அடுக்கு குளிர்சாதன பெட்டிகள்-3, படுக்கை வசதி கொண்ட பெட்டிகள்-9, முன்பதிவு இல்லாத பொது பெட்டி-4, சரக்கு பெட்டி-2 ஆகியவை இணைக்கப்பட்டு இருக்கும்.