சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நாளை நடைபெறுவதையொட்டி, தமிழகம் முழுவதும்  சிறப்புபேருந்துஇயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து துறை தெரிவித்து உள்ளது.

தமிழகம் முழுவதும் நாளை குரூப்4 தேர்வு நடைபெறுகிறது. இதற்காக மாநிலத்தில் உள்ள  38 மாவட்டங்களில் உள்ள 7,689 தேர்வு மையங்கள் தயார் நிலையில் உள்ளன. து. தேர்வை எழுத 9.35 லட்சம் ஆண்கள், 12.67 லட்சம் பெண்கள், 131 திருநங்கைகள் என மொத்தம் 22 லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்து உள்ளனர்.  சென்னையில் மட்டும்  503 தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ள சுமார் 1லட்சத்து 56 ஆயிரத்து 218 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

குரூப்4 தேர்வு நாளை  காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக ஒரு மையத்துக்கு ஒரு ஆய்வு அலுவலர் வீதம் 7 ஆயிரத்து 689 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்வு மையங்களுக்கு 1 லட்சத்து 10 ஆயிரத்து 150 கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றனர். மேலும் தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தவிர்க்கும் வகையில் 534 பறக்கும் படையினரும், 7,689 வீடியோ பதிவாளர்களும் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

குரூப் 4 தேர்வு நடைபெறுவதையொட்டி தமிழகம் முழுவதும் சிறப்பு பஸ்களை போக்குவரத்துறை இயக்குகிறது. அந்தந்த மாவட்ட கலெக்டர்களின் அறிவுறுத்தல்படி, மையங்களின் எண்ணிக்கை ஏற்ப நாளை சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தேர்வு மையங்கள் அருகே உள்ள பஸ் நிறுத்தத்தில் சிறப்பு பஸ்கள் முறையாக நின்று செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகி உள்ளது.