சென்னை: மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ,தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் சில நாட்களாக அனைத்து மாவட்டங்களிலும் வறண்ட வானிலை நிலவிய நிலையில் சில மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை கொட்டித்தீர்த்தது. அதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவ பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி உள்ளதாவது: வளி மண்டல சுழற்சியால் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு கோவை,நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.

குமரி கடல் பகுதியில் 1.5 முதல் 2.1 கிலோ மீட்டர் உயரம் வரை வளிமண்டல சுழற்சி நிலவுவதால் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் தமிழக மாவட்டங்களில் இன்றும், நாளையும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையை பொறுத்த வரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி. காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவித்துள்ளது.