தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. மருத்துவ ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவற்றின் தேவை அதிகரித்து வருகிறது.
இதனிடையே, கொரோனா தொற்று சிகிச்சை, தடுப்புப் பணிகளுக்காக, பொதுமக்கள் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.
அதனை ஏற்று, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், தொழிலதிபர்கள், திரையுலகினர் உட்பட பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில், முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு 10 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் சூரி.
அதோடு தனது மகள் வெண்ணிலா, மகன் சர்வான் ஆகியோரது சார்பில் 25,000 ரொக்கப் பணத்தையும் அளித்துள்ளார். இதனை ட்விட்டரில் தெரிவித்துள்ள உதயநிதி, சூரிக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
நடிகர் அண்ணன் @sooriofficial அவர்கள் ரூ.10 லட்சத்துக்கான காசோலையையும், தன் மகள் வெண்ணிலா – மகன் சர்வான் சார்பில் ரூ.25 ஆயிரத்துக்கான ரொக்கத்தையும் கொரோனா தடுப்பு பணிக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இன்று என்னிடம் வழங்கினார். சூரி அண்ணன் அவர்களுக்கு என் அன்பும் நன்றியும். pic.twitter.com/uoAoFSFSCX
— Udhay (@Udhaystalin) June 3, 2021