விழுப்புரம்

மிழகத்தில் ரேஷன் அட்டைகளுக்கு உளுந்து மற்றும் 1 கிலோ கூடுதல் சர்க்கரை விரைவில் வழங்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் நேற்று ஆய்வுப்பணி நடைபெற்றது.  அப்போது  காணை அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம், காணைகுப்பத்தில் திறந்தவெளி நெல்சேகரிப்பு மையம், பெரும்பாக்கத்தில் நியாயவிலைக் கடை ஆகியவற்றை உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி ஆய்வு செய்தார். அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் உடனிருந்தனர்.

இதைத் தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களிடம், “தமிழ்நாடு முழுவதும் 1,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள 3 ஆயிரம் ரேஷன் கடைகளை இரண்டாகப் பிரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  உணவுப் பொருள் வழங்கல் துறையில், முதல்வர் உத்தரவின்படி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையால் ரூ.2,600 கோடி சேமிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஆட்சியை விட, தற்போது தமிழகத்தில் கூடுதலாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, விவசாயிகள் பயன்பெற்று வருகின்றனர். அங்குத் தவறுகளைத் தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.  விரைவில் ரேஷன் கடைகளில் கூடுதலாக ஒரு கிலோ சர்க்கரை, உளுந்து ஆகியவை வழங்கப்படும்.

தமிழகத்தில் பயோ மெட்ரிக் திட்டம் முழுமையாக நிறைவேற்றப் படவில்லை. விரைவில் கண் கருவிழி மூலம் அடையாளம் காணும் முறை தமிழகம் முழுவதும் கொண்டு வரப்படும். மேலும் இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான காலி இடங்களில் கூரை அமைக்கப்பட்டு அங்கு நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்” என்று தெரிவித்தார்.