சென்னை

சென்னை மாதவரம் பேருந்து நிலையத்தில் 250 கிலோ வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது.

சென்னை நகரில் இருந்து ஆந்திரா, தெலங்கானா செல்லும் புறநகர் பேருந்துகளுக்கு எனத் தனியாக ஒரு பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தின்படி மாதவரத்தில் 95 கோடி ரூபாய் செலவில், பல்வேறு வசதிகளுடன் புறநகர் துணை பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.

இங்குக் கழிப்பறை, குடிநீர் வசதி, பேருந்து நிலையத்தின் முகப்பில் பயணிகளின் பயன்பாட்டுக்கு எல்.இ.டி அறிவிப்புப் பலகை, நுழைவு வாயிலில் வளைவு அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும்  நெட் ஜீரோ இலக்கை எட்டும் வகையில், மாதவரம் பேருந்து நிலையத்தில் 250 கிலோ வாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது.

இதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ள நிலையில், அப்பணிகள் நிறைவு பெற்றவுடன் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் பணி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.