Social media outrage over Odia missing from milestones on NH in Odisha

 

தமிழகத்தில் மட்டுமின்றி, இந்தி பேசாத அனைத்து மாநிலங்களிலும் இந்தியைத் திணிப்பதில் மோடியின் மத்திய அரசு வேகத்துடன் செயல்பட்டு வருவதைப் பார்க்க முடிகிறது.

 

தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் தமிழை அகற்றி விட்டு, இந்தியையும், ஆங்கிலத்தையும் மட்டுமே எழுதியதைப் போல, ஒடிசா மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மைல்கற்களில் இருந்த ஒடிய மொழி நீக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே அவற்றில் எழுதப்பட்டிருப்பதைப் பார்த்து, ஒடிய மக்கள் கொந்தளிக்கத் தொடங்கி உள்ளனர்.

 

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக சமூகவலைத்தளங்களில் ஒடிய நெட்டிசன்கள் இயக்கத்தையே தொடங்கி உள்ளனர். ட்விட்டரில் முன்னர் ஒடிய எழுத்துக்களுடன் இருந்த மைல்கற்களையும், தற்போது அவை நீக்கப்பட்ட நிலையில் காணப்படும் மைல் கற்களையும் பதிவிட்டு, தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். #StopHindiChauvinism என்பது உள்ளிட்ட ஹாஷ்டாக்குகளையும் உருவாக்கி, தங்களது பரப்புரையைத் தீவிரப்படுத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, இணையதள விண்ணப்பத்தில் கையெழுத்திடும் இயக்கத்தையும் தொடங்கி உள்ளனர். மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின்கட்கரி உள்ளிட்ட துறை தொடர்பான அனைவருக்கும் அதனை அனுப்பி வைக்க இருக்கின்றனர். ஒடிசாவில் உள்ள மைல்கற்களில், ஒடிய எழுத்துகள் மீண்டும் எழுதப்படுவதை, மத்திய அமைச்சர் நிதின்கட்கரியும், அதிகாரிகளும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் ஒடிய நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒடியர்களின் இந்த இயக்கத்திற்கு தமிழ் இளைஞர்கள் பலரும் ட்விட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆக, இந்தி எதிர்ப்பு என்பது இனி தமிழகத்தில் மட்டும் நடக்கும் போராட்டமாக இருக்காது போலும்!