சென்னை

துவரை இஸ்ரேலிலிருந்து 61 தமிழர்கள் மீட்கப்பட்டு தமிழகத்துக்கு வந்துள்ளனர்

இன்று தமிழக அரசு ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.

அதில்,

”இஸ்ரேல் பாலஸ்தீனம் நாடுகளுக்கு இடையேயான போர் தற்போது தீவிரமடைந்த நிலையில், தமிழக முதல்வர் ஆனைக்கிணங்க தமிழக அரசின் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவி எண்கள் மூலம் அங்கு சிக்கித் தவித்த 128 தமிழர்களின் தகவல்கள் அறியப்பட்டது. நேற்று 13.10.2023 அன்று முதற் கட்டமாக புது டெல்லி வந்த 21 தமிழர்கள் அவர்களது இல்லம் வரை, தமிழக அரசின் சார்பில் அழைத்து வரப்பட்டனர்.

இன்று இரண்டாம் கட்டமாக மதுரை, திண்டுக்கல், கரூர், தென்காசி, தர்மபுரி, திருப்பூர், திருவண்ணாமலை, திருச்சி, சென்னை, விழுப்புரம், திருப்பத்தூர், சேலம், கோயம்புத்தூர் முதலிய மாவட்டங்களை சேர்ந்த 28 தமிழர்கள் இஸ்ரேலில் இருந்து சிறப்பு விமானத்தில் காலை 06.00 மணிக்கு டில்லி வந்தனர்.

டில்லி விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில் அவர்களை வரவேற்று அவர்களுக்குக் காலை உணவு ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தமிழக அரசு செலவில் விமான பயணச் சீட்டுகளும் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் 16 தமிழர்கள் சென்னை விமான நிலையத்திற்கும், 12 தமிழர்கள் கோயம்புத்தூர் விமான நிலையத்திற்கும் வந்தடைந்தனர். அரசின் தரப்பில் அவர்கள் சொந்த மாவட்டங்கள் செல்ல வாகனங்களும் ஏற்பாடு செய்யப்பட்டது.

இவர்களை சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே. எஸ். மஸ்தான், அயலகத் தமிழர் நலத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் மற்றும் துறை அலுவலர்கள் வரவேற்று, அவர்களது சொந்த  ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை விமான நிலையம் வந்தடைந்த 12 தமிழர்களையும், கோவை மாவட்ட ஆட்சியர் வரவேற்று அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். இஸ்ரேலில் இருந்து 49 தமிழர்கள் ஆபரேஷன் அஜய் மற்றும் தமிழக  அரசின் சார்பிலும், 12 தமிழர்கள் தங்கள் சொந்த செலவிலும் தமிழ்நாடு வந்தடைந்துள்ளனர்.”

என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.