சென்னை:
குரூப் 4 தேர்வுக்கு இதுவரை 13 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 பதவியில் காலியாக உள்ள கிராம நிர்வாக அலுவலர் 274 இடம், ஜூனியர் அசிஸ்டெண்ட் 3,681, தட்டச்சர் 2,108, சுருக்கெழுத்து தட்டச்சர் 1024 என 7,138 இடங்கள். தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் ஜூனியர் அசிஸ்டெண்ட், பில் கலெக்டர், சுருக்கெழுத்து தட்டச்சர் பதவியில் 163 இடங்கள் நிரப்பப்படுகிறது. மொத்தம் குரூப் 4 பதவியில் 7,301 இடங்கள் போட்டி தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது. வரும் 28ம் தேதி வரை குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் உள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பத்தில் கேட்டுள்ள விவரங்களை ஒழுங்காக பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.